UPDATED : நவ 07, 2024 12:00 AM
ADDED : நவ 07, 2024 10:46 AM

ஓமலுார்:
தமிழக அரசு பொறியியல் கல்லுாரிகளில் முதல்முறையாக, சேலம் அரசு பொறியியல் கல்லுாரிக்கு, ஏ பிளஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
சேலம், கருப்பூரில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரி, 1996ல் தொடங்கப்பட்டது. தற்போது, 6 துறைகளில், 2,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அக்கல்லுாரி தர மதிப்பீடு அங்கீகாரம் வழங்க, கடந்த ஆக., 30, 31ல், முதல்கட்டமாக, நாக் குழுவினர் ஆய்வு நடத்தினர். அடுத்து அக்., 24, 25ல், இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.
அதில் கடந்த, 5 ஆண்டுகளில் மேற்கொண்ட உட்கட்டமைப்பு வசதி, கல்வி திட்டங்கள், மாணவர்களின் சாதனைகள், கல்லுாரியில் ஆராய்ச்சி, மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசித்தனர். இந்நிலையில் சேலம் அரசு பொறியியில் கல்லுாரிக்கு, நாக் குழு-வினர், ஏ பிளஸ் அந்தஸ்தை நேற்று முன்தினம் வழங்கினர்.
இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் விஜயன் கூறியதாவது:
நாக் குழுவினர், 4 புள்ளிக்கு, 3.43 புள்ளிகள் வழங்கி, ஏ பிளஸ் அந்தஸ்து கொடுத்துள்ளனர். இது கல்லுாரியின் குறிப்பிடத்தக்க சாதனை. கல்வியில் உயர் தரத்தை பேணுவதில், அதன் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரிகளில் முதல்முறை, ஏ பிளஸ் தரச்சான்றிதழை, சேலம் அரசு பொறியியல் கல்லுாரி பெற்றுள்ளது. இச்சாதனைக்கு பங்காற்றிய உள் தர உறுதி பிரிவு இயக்குனர் சிவலட்சுமி, அனைத்து துறை பேராசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்-களுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறினார்.