பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை; மத்திய அமைச்சர் குமாரசாமி வேண்டுகோள்
பள்ளி பாடத்திட்டத்தில் பகவத் கீதை; மத்திய அமைச்சர் குமாரசாமி வேண்டுகோள்
UPDATED : டிச 08, 2025 06:31 PM
ADDED : டிச 08, 2025 06:45 PM
பெங்களூரு:
பள்ளி பாடத்திட்டத்தில், பகவத் கீதை சாராம்சங்களை சேர்க்கும்படி, மத்திய கனரகத்துறை அமைச்சர் குமாரசாமி, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு, மத்திய அமைச்சர் குமாரசாமி எழுதிய கடிதம்:
பகவத் கீதை காலத்தால் அழியாதது. தரமான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்கு பகவத் கீதை அவசியம். இந்தியா பண்டைய காலத்தில் இருந்தே ரிஷிகள், சாது, சன்னியாசிகளை மதிக்கும் நாடு. சனாதன தர்மத்தை போற்றுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனுக்கு போதித்த அறிவு களஞ்சியம். நேர்மை மற்றும் அர்ப்பணிப்புடன், ஒவ்வொருவரும் கடமையை நிறைவேற்றும் என்பதை உணர்த்துவது பகவத் கீதை. தற்போதைய சூழ்நிலையில் பகவத் கீதை மிகவும் அவசியம்.
பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் உடுப்பிக்கு வந்த போது, ஹிந்து மதத்தின் அடிப்படை கொள்கைகள், தத்துவங்களை அழுத்தமாக கூறினார். பகவத் கீதையின் மகத்துவத்தை உணர்த்தினார்.
ஷிவமொக்காவில் நடந்த பகவத் கீதை பாராயணம் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிர்ஷ்டம், எனக்கு கிடைத்தது. கீதையை பாராயணம் செய்த போது, மனதுக்குள் சக்தி, பக்தியை உணர வாய்ப்பு கிடைத்தது. அப்போது பல தலைவர்கள், என்னிடம் பகவத் கீதை உபதேசங்களை பள்ளி பாட திட்டங்களில் சேர்க்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தனர்.
மனித குலத்துக்கு வழிகாட்டி, அறிவு ஒளி ஏற்றும் பகவத் கீதையை பள்ளி, கல்லுாரிகள், பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி, கல்வியின் ஒவ்வொரு கட்டத்திலும், பாடமாக இருக்க வேண்டும் என்பது, என் விருப்பம்.
அது போன்று வால்மீகி எழுதிய ராமாயணம், வியாசர் எழுதிய மஹாபாரதம் காவியங்களை குழந்தைகளுக்கு போதிப்பது அவசியம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

