UPDATED : ஜூன் 01, 2026 06:06 PM
ADDED : ஜூன் 01, 2026 06:07 PM
சிதம்பரம்:
வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சார்பில் நடந்த புத்தகம் வாசிப்பு பயிற்சி போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள முறையில் மாற்ற வாசிப்பு மேம்பாட்டு இயக்கம் சார்பில் வாசிப்பு பயிற்சி போட்டி அறிவிக்கப்பட்டது. மாணவ மாணவிகள் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள நுாலகங்களுக்கு சென்று சுதந்திர போராட்ட தியாகிகள், அறிவியல் அறிஞர்கள் வாழ்க்கை வரலாறு, நீதிக் கதைகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாசித்து அதன் சுருக்கத்தை கட்டுரையாக எழுதி அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இப்போட்டியில் ஏராளமான மாணவ மாணவிகள் பங்கேற்றனர். கடலுார் மாவட்டம் சிதம்பரம் ஷெம்போர்டு பள்ளி ரேஷ்மி, தாரணிக்காதேவி, அரியலுார் மாவட்டம் தென்னுார் அன்னை லுார்து பெண்கள் மேல்நிலைப் பள்ளி அபிநயா, காட்டுமன்னார்கோயில் பி.ஆர்.ஜி., மேல்நிலைப் பள்ளி சூர்யா ஆகியோர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு சிறப்பாக அமைந்திருந்தது.
சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசும், போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும், தமிழக முன்னாள் தலைமை செயலர் இறையன்பு எழுதிய, அச்சம் தவிர் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த தகவலை வாசிப்பு மேம்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
