UPDATED : செப் 17, 2024 12:00 AM
ADDED : செப் 17, 2024 10:15 AM

மதுரை :
மதுரை தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் நடந்து வரும் புத்தகத் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங்கத்தில், 231 ஸ்டால்களில் லட்சக்கணக்கான தலைப்புகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கலெக்டர் சங்கீதா உத்தரவுப்படி தினமும் பள்ளி மாணவர்கள் 2000 பேர், கல்லுாரி மாணவர்கள் 1500 பேரை மாவட்ட நிர்வாகம் சார்பில் பஸ்சில் இலவசமாக அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டதால் இந்தாண்டு மாணவர்கள் அதிகம் பயனடைந்தனர். குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் வந்து புத்தகங்கள் வாங்கி சென்றனர்.
தினமும் ஆயிரக்கணக்கான புத்தக ஆர்வலர்கள் கண்காட்சியை பார்வையிட்டு, தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர். தினமும் மாலை 6:00 மணிக்கு பேச்சாளர்கள், எழுத்தாளர்களின் கருத்தரங்குகள், பட்டிமன்றங்கள் நடந்தன.
தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளிச் செல்ல இன்றே கடைசி வாய்ப்பு. காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஸ்டால்களை பார்வையிடலாம். அனுமதி இலவசம். அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடி உண்டு. பள்ளி மாணவர்களுக்கு புத்தக விற்பனையில் கூடுதல் தள்ளுபடியும் உண்டு.