பிரிக்ஸ் டில்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்பு; தபால் தலைகளை வெளியிட்டார் பிரதமர் மோடி
பிரிக்ஸ் டில்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்பு; தபால் தலைகளை வெளியிட்டார் பிரதமர் மோடி
UPDATED : செப் 13, 2026 12:37 PM
ADDED : செப் 13, 2026 12:39 PM
புதுடில்லி:
பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் மோடி முன்மொழிந்த பிரிக்ஸ் டில்லி பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
டில்லியில் நடந்து வரும் 18வது பிரிக்ஸ் மாநாட்டில், உலகளவில் நிலவி வரும் போர், ஆக்கிரமிப்பு பிரச்னைகளை தீர்வு காணும் வகையில், 'பேச்சுவார்த்தையும், ராஜதந்திரமும் முன்னேற்றத்திற்கான ஒரே வழி' என்பதை மையமாக வைத்து, இந்தியா உருவாக்கிய பிரிக்ஸ் டில்லி பிரகடனத்தை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரகடனம் தொடர்பாக அனைத்து நாடுகளின் தலைவர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதற்கு அனைத்து நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
அதன்படி, எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாமல், பல்வேறு நாடுகளிடையே நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக, பிரதமர் மோடி முன்மொழிந்த 'பிரிக்ஸ் டில்லி பிரகடனம்' அனைத்து நாடுகளின் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்தப் பிரகடனத்தின் மூலம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் பிரிக்ஸ் நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பது உள்ளிட்டவற்றை எதிர்த்துப் போராட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐநாவால் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மீது கூட்டு நடவடிக்கை எடுக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஒருதலைபட்சமான பொருளாதார தடைகளுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்காசியாவில் நிலவி வரும் பதற்றங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. பிராந்தியத்தில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், பிரிக்ஸ் 20வது ஆண்டையொட்டி, சிறப்பு தபால் தலைகளையும் பிரதமர் மோடி வெளியிட்டார். தொடர்ந்து, டில்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்டை நினைவுகூரும் வகையில், பாரத் மண்டபத்தில் பிரிக்ஸ் தலைவர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
ஒரே பஸ்ஸில்...
பிரிக்ஸ் மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் பங்கேற்பதற்காக, மத்திய அமைச்சர்கள், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், ஒரே பஸ்ஸில் பயணித்து சென்றனர்.
