பட்ஜெட் 2026: 15,000 பள்ளிகளில் 'ஏ.வி.ஜி.சி.,' ஆய்வகங்கள்
பட்ஜெட் 2026: 15,000 பள்ளிகளில் 'ஏ.வி.ஜி.சி.,' ஆய்வகங்கள்
UPDATED : பிப் 02, 2026 08:16 PM
ADDED : பிப் 02, 2026 08:23 PM

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026 - 27ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை பிப்., 1 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரம் மற்றும் விவசாயத் துறையில் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில் இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
'ஏ.வி.ஜி.சி.,' ஆய்வகங்கள்
எதிர்கால வேலைவாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு, 'ஆரஞ்சுப் பொருளாதாரம்' (Orange Economy) எனப்படும் படைப்பாற்றல் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அனிமேஷன், விசுவல் எபெக்ட்ஸ், கேமிங் மற்றும் காமிக்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய 'ஏ.வி.ஜி.சி.,' துறையில், 2030ம் ஆண்டிற்குள் சுமார் 20 லட்சம் வல்லுநர்கள் தேவைப்படுவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், நாடு முழுவதும் உள்ள 15,000 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 500 கல்லூரிகளில் நவீன வசதிகளுடன் கூடிய 'ஏ.வி.ஜி.சி., கன்டென்ட் கிரியேஷன் லப்ஸ்' அமைக்கப்படும்.
இதன் மூலம் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்பத் திறன்கள் கற்றுத்தரப்படும். மேலும், மும்பையில் உள்ள இந்தியப் படைப்பாற்றல் தொழில்நுட்ப நிறுவனத்திற்குத் தேவையான ஆதரவும் வழங்கப்படும்.
'பாரத் - விஸ்தார்'
விவசாயத் துறையில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய தளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
'பாரத் - விஸ்தார்' என்ற இத்தளம் ஒரு ஒருங்கிணைந்த பன்மொழித் தளமாகச் செயல்படும். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் விவசாய நடைமுறைகள் குறித்த தரவுகளை இது ஒருங்கிணைக்கும்.
விவசாயிகளுக்கு அவர்களின் மண் வளம் மற்றும் பயிர் நிலைக்கு ஏற்ப, தனித்துவமான ஆலோசனைகளை இது வழங்கும். இதன் மூலம் விவசாயிகள் சரியான நேரத்தில் உரிய முடிவுகளை எடுத்து, விவசாய உற்பத்தித் திறனை மேம்படுத்த முடியும்.
இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

