இளைஞர்கள் சமூகப் பணியில் ஈடுபடணும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
இளைஞர்கள் சமூகப் பணியில் ஈடுபடணும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
UPDATED : மார் 09, 2026 11:30 AM
ADDED : மார் 09, 2026 11:39 AM
கூடலூர்:
'இளைஞர்கள் தங்களை சமூகப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்' என, கூடலூரில் இளையோர் மன்ற விகாஸ் அபியான் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
கூடலூர், தோட்ட தொழிலாளர் தொழிற் பயிற்சி மையத்தில், மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மேரா யுவ பாரத், நீலகிரி மாவட்டம் சார்பில், யுவ மண்டல விகாஸ் அபியான் 2025, என்ற இளைஞர் மேம்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று, நடந்தது. நிகழ்ச்சிக்கு மையத்தின் முதல்வர் சாஜி ஜார்ஜ் தலைமை வகித்தார்.
நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தன்னார்வலர்கள் சங்கீதா, சாய்புனிஷா முன்னிலை வகித்தனர்.
கூடலூர் சுற்றுச் சூழல் மையத்தில் செயலாளர் சிவசுப்பிர மணியம் பேசுகையில், “இளைஞர்கள் சமூக மேம்பாட்டு பணியில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். கிராம முன்னேற்றம், மாணவர்களுக்கு மாலை நேர படிப்பகம் நடத்துவது, ரத்ததான முகாம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.
நிகழ்ச்சியில், ஆக்க பூர்வமான செயல்பாடுகள் குறித்து விவாத நிகழ்ச்சி நடந்தது.

