வேலை நெருங்கிய போது நொறுங்கிய கனவு; குரூப் - 2, 2ஏ தேர்வு திடீர் ரத்து தேர்வர்கள் கண்கலங்கினர்
வேலை நெருங்கிய போது நொறுங்கிய கனவு; குரூப் - 2, 2ஏ தேர்வு திடீர் ரத்து தேர்வர்கள் கண்கலங்கினர்
UPDATED : பிப் 09, 2026 01:57 PM
ADDED : பிப் 09, 2026 02:00 PM

திருப்பூர்:
தேர்வு ரத்து செய்தியை காலம் தாழ்த்தி, கடைசி நேரத்தில் தெரிவித்ததால், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய, குரூப் 2, 2ஏ தேர்வர்கள் கவலை அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெறுவதாக இருந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் '2ஏ' தேர்வு, சென்னையில் தேர்வு மையம் குளறுபடி காரணமாக ரத்தானது. திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி மையத்தில், காலையில் நடந்த குரூப் '2ஏ' தேர்வுக்கு 179 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. இவர்களில், 168 பேர் பங்கேற்றனர்; 11 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
தேர்வு ரத்து
தகவல் தெரிந்த பெற்றோர், உறவினர்கள் பலர், தேர்வர்களை அழைத்துச் செல்வதற்காக, காலை, 11:00 மணிக்கு மீண்டும், தேர்வு மையத்துக்கு வந்தனர். ஆனால், தேர்வு ரத்து செய்யப்படாமல், தொடர்ந்து நடத்தப்பட்டது. மதியம், 12:15 மணி வரை தொடர்ந்து தேர்வு நடத்திவிட்டு, கடைசி நிமிடத்திலேயே ரத்து செய்யப்பட்ட தகவல் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இது, தேர்வு எழுதிய தேர்வர்களை கண்கலங்கச் செய்துவிட்டது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகள் மீதான நம்பகத்தன்மை காணாமல் போகிறது!
தேர்வு மையத்தை விட்டு வெளியே வந்த தேர்வர்கள், நம்மிடம் தங்கள் மனவேதனையைப் பகிர்ந்து கொண்டனர்.
அபர்ணா:
வினாக்கள் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. தயாராக வந்திருந்தேன். கடைசி நேரத்தில், தேர்வு ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது கவலை அளிக்கிறது. மீண்டும் தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. பத்து நிமிடங்களுக்கு முன்னரே, தெரிவிக்கப்பட்டது. முதல் நிலை தேர்வுக்கும் பிரதான தேர்வுக்கும் இடையே குறுகிய நாட்களே இருந்தன. சிரமப்பட்டுதான் பாடங்களை படித்து முடித்தோம். தேர்வு ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது, பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
பாலியானா நாச்சியார்:
கடந்த செப்டம்பரில் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு, டிசம்பரில் முடிவுகள் வெளியிடப்பட்டது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான குறுகிய நாட்களிலேயே, கடுமையாக படித்து, பிரதான தேர்வுக்கு தயாரானோம். சிரமப்பட்டு படித்தும், கடைசியில் தேர்வு ரத்து செய்யப்பட்டது கவலை அளிக்கிறது. குரூப் தேர்வுகளை திட்டமிட்டு, சரியான வகையில் நடத்த அரசு ஆவன செய்ய வேண்டும்.
தேவி:
தேர்வு நாளான இந்த ஒரு நாளுக்காகத் தான், மாதக்கணக்கில் இரவு பகலாக படித்து, தயாரானோம். முழுமையாக தேர்வு நடத்திவிட்டு, கடைசி நேரத்தில், ரத்து செய்ததாக அறிவிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது. தலைமையகமான சென்னையிலேயே தேர்வு மையத்தில், குளறுபடி ஏற்படுவது வருந்தத்தக்கது.
தேர்வு நடத்துவதிலேயே குளறுபடியென்றால், விடைத்தாள் திருத்துவது, தேர்வு முடிவுகளில் ஏன் குளறுபடி நடைபெறாது என்கிற கேள்வி எழுகிறது. இவற்றிலெல்லாம் வெளிப்படைத்தன்மை இல்லையே! குரூப் தேர்வுகள் மீதான தேர்வர்களின் நம்பகத்தன்மையை, உறுதிப்படுத்த வேண்டும்.
முபாரக்:
வேலை செய்யும் நிறுவனத்தில் மருத்துவ விடுப்பு எடுத்துவிட்டு தேர்வு எழுத வந்தேன். அதிகாலை, 04:00 மணிக்கு புறப்பட்டு, 07:00 மணிக்கெல்லாம், திருப்பூர் தேர்வு மையத்துக்கு வந்து சேர்ந்துவிட்டேன். மொத்தம் மூன்று மணி நேரத்தில், கடைசி பத்து நிமிடத்திலேயே,தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்து, எழுதியவரை போதும் என கூறி, விடைத்தாளை வாங்கிவிட்டனர்.
முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்ற, குறைவான எண்ணிக்கையிலானோரே பிரதான தேர்வு எழுதுகின்றனர். குறைந்த தேர்வர்களுக்கு கூட திறம்பட தேர்வு நடத்த முடியவில்லையென்றால், என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
பசுபதி:
காலையில் துவங்கிய சில நிமிடங்களிலேயே தேர்வு ஒத்திவைக்கப்பட்ட போதும், தேர்வராகிய எங்களுக்கு, மதியம் 12:15 மணியளவிலேயே, அறிவித்தனர். இதை கேட்டு பெரும் அதிர்ச்சியும், மன உளைச்சலுக்கு உள்ளானேன். நான்கு மாதங்கள் கடினமாக படித்து, தேர்வு எழுதினோம். மீண்டும் தேர்வுக்கு தயாராக வேண்டியுள்ளது. ரத்து செய்யப்பட்ட தேர்வு மீண்டும் எப்போது நடத்தப்படும் என்பது தெரியவில்லை.

