UPDATED : அக் 31, 2024 12:00 AM
ADDED : அக் 31, 2024 11:16 AM
கீழ்ப்பாக்கம்:
கடலுார் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் ஆலன் கிரைசோ, 21. இவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த, 24ம் தேதி கல்லுாரி விடுதியில் ஆலனிடம் ஐந்தாம் ஆண்டு மாணவர்களான கவின், 24, தியானேஷ், 24, ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, பீர் பாட்டிலால் தாக்கியதில், ஆலனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து, மருத்துவமனை முதல்வர் தலைமையிலான ஐந்து பேர் குழு விசாரித்து, கவின், தியானேஷ் ஆகியோரை, மருத்துவ கல்லுாரி நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில், ஆலனின் தந்தை அளித்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட கீழ்ப்பாக்கம் போலீசார், கவின் மற்றும் தியானேஷ் மீது, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.