சி.பி.எஸ்.இ., மும்மொழி கொள்கை புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
சி.பி.எஸ்.இ., மும்மொழி கொள்கை புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு
UPDATED : ஜூன் 30, 2026 09:51 AM
ADDED : ஜூன் 30, 2026 09:54 AM

தேசிய கல்விக் கொள்கை - 2020ன்படி, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு முதல், மும்மொழி கொள்கை அமலாகிறது. அதன்படி, மாணவர்கள் இரு இந்திய மொழிகளையும், ஒரு வெளிநாட்டு மொழியையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தற்போது, 7, 8 மற்றும் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளை படிப்பதால், ஒரு இந்திய மொழிக்காக ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழியை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக பெற்றோர் மத்தியில் குழப்பமும் நிலவியது.
இந்நிலையில், மும்மொழி கொள்கை தொடர்பாக, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் நேற்று வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்கள்:
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தற்போதைய கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மும்மொழி கொள்கையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அதே போல் தற்போது, 7, 8 மற்றும் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள், 10-ம் வகுப்புக்கு செல்லும் போது மூன்றாவது மொழிக்கு பொதுத்தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை. 7, 8 மற்றும் 9ம் வகுப்புகளில் ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளை படிக்கும் மாணவர்கள், அவற்றை தொடரலாம்.
அவர்கள் கூடுதலாக ஒரு இந்திய மொழியை சேர்த்து, மூன்று மொழிகளை படிக்க வேண்டும். இந்த கல்வி ஆண்டு முதல், 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் மற்றும் அறிவியலில், 'ஸ்டாண்டர்டு, அட்வான்ஸ்டு' என, இரண்டு நிலைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
அனைத்து மாணவர்களும், 80 மதிப்பெண்களுக்கு பொதுவான தேர்வை எழுதுவர். பாடங்களில் கூடுதல் தேர்ச்சி பெற விரும்பும் மாணவர்கள், ஆழமான கருத்து புரிதல் மற்றும் உயர்நிலை சிந்தனை திறன்களை சோதிக்க, 'அட்வான்ஸ்டு' தேர்வை எழுதலாம். இந்த முறையின் கீழ், 2028ல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
