நிரந்தர குடியுரிமை திட்டத்தில் மாற்றம்; இந்திய மாணவர்களுக்கு பின்னடைவு
நிரந்தர குடியுரிமை திட்டத்தில் மாற்றம்; இந்திய மாணவர்களுக்கு பின்னடைவு
UPDATED : ஜூன் 16, 2026 10:39 PM
ADDED : ஜூன் 16, 2026 10:40 PM
ஒட்டாவோ:
கனடாவின் மேனிடோபா மாகாண அரசு, சர்வதேச மாணவர்களுக்கான நிரந்தர குடியுரிமை பெறும் திட்டத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதனால் கனடாவில் கல்வி கற்று, அங்கேயே குடியேறத் திட்டமிடும் இந்திய மாணவர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என கருதப்படுகிறது.
வட அமெரிக்க நாடான கனடாவில் படிப்பை முடித்த உடனே ஏதேனும் ஒரு துறையில் ஓராண்டு வேலைக்கான ஒப்பந்த கடிதம் பெற்றால், உடனடியாக பி.ஆர்., எனப்படும் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த குடியுரிமை பெறுவதற்கான சி.இ.பி., எனும் 'கேரியர் எம்ப்ளாயிமென்ட் பாத்வே' திட்டம் கனடாவில் உள்ள மாகாண அரசுகள் செயல்படுத்தி வந்தன.
இந்நிலையில், இத்திட்டத்தை மேனிடோபா மாகாண அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. புதிய விதிகளின்படி இனி பட்டப்படிப்பு முடித்ததும், நேரடியாக நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது. ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் முழு நேரப் பணியாளராக பணியாற்றி இருக்க வேண்டும். தற்காலிக ஒப்பந்தங்கள் ஏற்கப்படாது. நீண்ட கால அடிப்படையில் முழு நேர பணிக்கான ஒப்பந்த கடிதம் பெற்றிருக்க வேண்டும்.
கனடாவின் ஆறாவது பெரிய மாகாணமான மேனிடோபாவின் தலைநகரான வின்னிபெக்கில் வாழ்வாதார செலவுகள் மிகவும் குறைவு. இதனால், டொராண்டோ, ஒட்டாவா போன்ற நகரங்களை விட, மேனிடோபாவில் குடியேறவே இந்திய மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர்.
கடந்த 2021ம் ஆண்டு தரவுகளின்படி, அங்கு நிரந்தர குடியுரிமை வாங்கியவர்களில் 33 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். தற்போது நிரந்தர குடியுரிமை பெறும் திட்டத்தில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வந்திருப்பதால், இந்திய மாணவர்கள் இனி கல்வி தகுதியை மட்டும் நம்பியிருக்காமல் மாற்று வழிகளை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
