UPDATED : ஜூலை 06, 2026 09:56 AM
ADDED : ஜூலை 06, 2026 09:58 AM
சென்னை:
நடந்து முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களின் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவுகள் ஜூலை 6 பிற்பகல் வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களின் நகல் பெற்ற தேர்வர்கள், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது. இதில் பாடவாரியாக மறுமதிப்பீட்டிற்கு 7,931 விண்ணப்பங்களும், மறுகூட்டலுக்கு 751 விண்ணப்பங்களும் என மொத்தம் 8,682 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, அனுபவம் வாய்ந்த பாட ஆசிரியர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சிறப்பு முகாம் மூலம் தொடங்கிய மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் பணிகள், கடந்த ஜூலை 4ம் தேதியன்று முழுமையாக நிறைவடைந்தன.
இதில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் விவரங்கள், நாளை பிற்பகல் www.dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் 'Notification' பகுதியில் வெளியிடப்பட உள்ளன. இந்த இறுதிப் பட்டியலில் இடம் பெறாத பதிவு எண்களைக் கொண்ட தேர்வர்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை.
மேலும், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும், தங்களது தேர்வுப் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களைக் குறிப்பிட்டு, தங்களுக்கான திருத்தப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அதே இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களுக்குமான அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்த மறுமதிப்பீடு முடிவுகள் தொடர்பான சந்தேகங்களுக்கு 9498383075; 9498383076 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
