UPDATED : நவ 04, 2025 07:44 AM
ADDED : நவ 04, 2025 07:45 AM
பந்தலுார்:
பந்தலுார் அருகே பாட்டவயல் அரசு பள்ளி வகுப்பறைகள் தூரிகையால் வண்ணமயமாக மாறி மாணவர்களை கவர்கிறது.
மலை மாவட்டமான நீலகிரியில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளை நாடி படிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், வனப் பகுதிகளை ஒட்டிய கிராமங்களில் உள்ள, பள்ளிகளில் மாணவர் வருகை குறைந்து வருகிறது.
பழங்குடியின பெற்றோர்களின் அறியாமை மற்றும் பழங்குடி கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து செல்ல போதிய போக்குவரத்து வசதி இல்லாதது போன்றவை, மாணவர்களின் இடைநிற்றலுக்கு காரணமாக மாறி வருகிறது.
இதை தவிர்க்க கல்வித்துறை அதிகாரிகள், பழங்குடி கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்வதுடன், மாணவர்கள் வந்து செல்ல ஆட்டோ மற்றும் ஜீப் வசதி ஏற்படுத்தி தருகின்றனர்.
பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கூடலுார் வனக்கோட்ட எல்லையில் உள்ள, பாட்டவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் வகுப்பறையின் முன் பக்க சுவர்கள் மற்றும் வகுப்பறையின் உள்பகுதிகளில், கோவையைச் சேர்ந்த 'துாரிகை' அறக்கட்டளை சார்பில் வண்ணமயமான ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் கணிதம், அறிவியல், தமிழ் மற்றும் ஆங்கில உயிர் எழுத்துக்கள், கம்ப்யூட்டர் சார்ந்த தகவல்கள் உள்ளிட்ட ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
இவர்களுடன் பள்ளி ஆசிரியர்களும், ஓவியத்தில் ஆர்வமுள்ள மாணவர்களும், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகளும் வண்ணம் தீட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.வண்ணமயமாகும் வகுப்பறைகளில், அமர்ந்து கல்வி கற்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டி வருவதால், இடைநிற்றல் குறைவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

