மூடப்பட்ட பழங்குடி மக்களுக்கான பள்ளி மீண்டும் திறப்பு!
மூடப்பட்ட பழங்குடி மக்களுக்கான பள்ளி மீண்டும் திறப்பு!
UPDATED : செப் 09, 2025 12:00 AM
ADDED : செப் 09, 2025 08:16 AM
பந்தலுார்:
பந்தலுார் அருகே, முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய, பென்னை பகுதியில் மாணவர்கள் சேர்க்கை இல்லை என்று கூறி மூடிய அரசு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் மாணவர்கள் எண்ணிக்கை ஜீரோவாக உள்ளதாக கூறி, 25 அரசு பள்ளிகளை மாநில கல்வித்துறை மூடியது. அதில், பெரும்பாலான பள்ளிகள் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், மூடப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் மூடியதாக, தெரிவிக்கப்பட்டது. மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. அதில், பந்தலுார் அருகே முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய, பென்னை பகுதியில், 32 மாணவருடன் செயல்பட்டு வந்த அரசு ஆரம்பப்பள்ளியும் மூடப்பட்டது.
இடைநிற்றல் அதிகரிப்பு பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்து வரும் இந்தப் பகுதியில், குடியிருப்பில் பள்ளி செயல்பட்டு வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, கல்வித்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து பள்ளியை மூடியதுடன், இங்கு படித்து வந்த மாணவர்களை, பாட்டவயல் மற்றும் முக்கட்டி அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால், பழங்குடியின மாணவர்கள் மத்தியில் இடைநிற்றல் அதிகரித்து வந்தது.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் கடந்த ஆக.,23ம் தேதி, முழு தகவலுடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, கடந்த, 30 ம் தேதி, பென்னை பகுதியில் அனைத்து கட்சியினர் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. அங்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள், 'செப்., 8-ம் தேதி பள்ளி மீண்டும் திறந்து செயல்படுத்தப்படும்,' என, உறுதி அளித்தனர்.
மீண்டும் பள்ளி திறப்பு தொடர்ந்து, நேற்று காலை பென்னை அங்கன்வாடி மையத்தில், ஆரம்ப பள்ளி மீண்டும் திறந்து செயல்பட தொட துவங்கியது. வட்டார கல்வி அலுவலர் வாசுகி வகுப்பறையை திறந்து வைத்தார். முதல் நாளான நேற்று, 12 மாணவர்கள் வருகை தந்தனர். பாட்டவயல் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி இந்த பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டு உள்ளார். இரண்டு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதனால், வனப்பகுதி வழியாக விலங்கு நடமாட்டம் உள்ள பாதையில், அச்சத்துடன் வேறு பள்ளிகளுக்கு சென்று வந்த பழங்குடியின மாணவர்கள் நிம்மதியுடன் கிராமத்தை ஒட்டி உள்ள பள்ளிக்கு சென்றனர்.
பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்தனர். பெற்றோர் கூறுகையில், 'இப்பகுதியில் தொடர்ந்து பள்ளி செயல்படும் வகையில், நிரந்தர கட்டடம் கட்டி, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியை செயல்படுத்த வேண்டும்,' என்றனர்.
மற்ற பள்ளிகளையும் திறக்கணும்...
பண்டைய பழங்குடியின பேரவை நிர்வாகி நீலகண்டன் கூறுகையில்,'' நீலகிரியில் வனப்பகுதியில் வாழும் பழங்குடியினர் உட்பட பிற ஏழை மக்களின் வாழ்வை கல்வி மட்டுமே மேம்படுத்த முடியும். இதற்காக தான், வனத்தை ஒட்டிய பகுதியில், பல ஆரம்பப்பள்ளிகள்; உண்டு உறைவிடப்பள்ளிகள் துவக்கப்பட்டன. அதில், 25 பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில்லை எனக்கூறி மூடிவிட்டனர். மக்களின் போராட்டத்தால் தற்போது, ஒரு பள்ளி திறக்கப்பட்டது. இதேபோல மற்ற பள்ளிகளையும் திறந்து பழங்குடிகளின் கல்வி கண்ணை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான மனுவை முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி உள்ளோம்,'' என்றார்.