526 கிராமப்புற நுாலகங்களுக்கு... பூட்டு! இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி
526 கிராமப்புற நுாலகங்களுக்கு... பூட்டு! இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறி
UPDATED : ஜன 28, 2026 12:21 PM
ADDED : ஜன 28, 2026 12:24 PM

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 17 கோடி ரூபாயில் கட்டப்பட்ட, 526 கிராமப்புற நுாலக கட்டடங்கள் பூட்டியே கிடப்பதால், கல்லுாரி மாணவர்களின் கல்வி மற்றும் அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, எதிர்காலம் உள்ளிட்டவை கேள்விக்குறியாகி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 2006ல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 526 ஊராட்சிகளிலும், தலா 3.25 லட்சம் ரூபாய் செலவில், மொத்தம் 17 கோடி ரூபாயில் கிராமப்புற நுாலக கட்டடங்கள் அமைக்கப்பட்டன.
காட்சி பொருள்
ஒவ்வொரு நுாலகத்திலும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கான புத்தகங்கள், நுால்கள், கட்டுரைகள் என, 500க்கும் மேற்பட்டவை வைக்கப்பட்டன.
இந்த நுாலகங்களில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள், 2,000 ரூபாய் மாத சம்பளத்தில் பணிபுரிந்து வந்தனர். இது, மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என, பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ளதாக இருந்தது.
குறிப்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகள், மத்திய அரசின் குடிமை பணிகளுக்கான தேர்வுகளில் பங்கேற்க முயற்சிக்கும் கிராமப்புற இளைஞர்களுக்கு தேவையான புத்தகங்கள் இந்த நுாலகங்களில் கிடைத்தன.
இந்நிலையில், மேற்கண்ட கிராமப்புற நுாலகங்கள், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியே கிடக்கின்றன. ஒரு சில கட்டடங்கள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளன. அதே சமயம் கட்டடங்கள் மட்டும், அவ்வப்போது நிதி ஒதுக்கி, புதுப்பிக்கப்பட்டு காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளன.
கிராமப்புற மக்கள் புத்தக வாசிப்பு திறனை மறக்காமல் இருக்கவும், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு உதவும் வகையிலும் கொண்டு வரப்பட்ட கிராமப்பற நுாலகங்கள், தற்போது முற்றிலும் செயல்பாடின்றி முடங்கி கிடப்பது, வாசகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நுாலகங்கள் பூட்டியே கிடப்பதால் கிராமப்புற மாணவர்கள், இளைஞர்கள், கல்வியாளர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மாவட்டம் முழுதும், 17 கோடி ரூபாயில் கட்டடங்கள், பல லட்சம் ரூபாய் செலவில் புத்தகங்கள் மற்றும் அவ்வப்போது பல லட்சங்களில் புதுப்பிக்கும் பணிகள் என, இதுவரை செலவிடப்பட்ட அனைத்து நிதியும் வீணாகி வருகிறது.
குற்றச்சாட்டு
நுாலகங்களில் பணிபுரியும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் உரிய முறையில் சம்பளம் வழங்காததால், அவர்கள் பணிக்கு வர தயங்குவதாகவும், அதனால் பூட்டி கிடப்பதாகவும் கூறப்படுகிறது.
கிராமப்புற நுாலகங்கள் செயல்படுவது போல் கணக்குகாட்டி, சம்பள தொகையை உள்ளாட்சி அமைப்புகளே பெற்று வருவதாகவும் குற்றச் சாட்டுகளும் எழுந்துள்ளன.
கிராமப்புற மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்தவும், இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கான தேடல்களுக்கு உதவிடவும், இது போன்ற கிராமப்புற நுாலகங்களை, பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நுாலகங்களுடன் இணைத்து கண்காணிக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இளைஞர்கள், முதியவர்கள் தவிப்பு வயதானவர்கள் காலை - மாலை நேரங்களில் நுாலகங்களுக்கு வந்து, பல்வேறு வகையான புத்தகங்களை படித்து செல்வர். இளைஞர்கள் நுாலகங்களுக்கு தொடர்ந்து வரும் பட்சத்தில், போதை போன்ற மாற்று சிந்தனைகளில் ஈடுபடுவது தவிர்க்க முடியும். அரசு பணிகளுக்கு தயாராகும் கிராமப்புற இளைஞர்கள், தேவையான புத்தகங்கள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
- அ.ஸ்ரீதர்பாபு, சமூக ஆர்வலர், பொன்னேரி.

