இன்ஸ்டா சிக்கலை கண்டறிந்த கோவை மாணவர்; மெட்டா நிறுவனம் வெகுமதி
இன்ஸ்டா சிக்கலை கண்டறிந்த கோவை மாணவர்; மெட்டா நிறுவனம் வெகுமதி
UPDATED : நவ 03, 2024 12:00 AM
ADDED : நவ 03, 2024 08:06 AM

நியூயார்க்:
இன்ஸ்டா செயலியின் கமென்ட் பகுதியை செயலிழக்கச் செய்யும் மிகப்பெரிய சிக்கலை கவனத்துக்கு கொண்டு சென்ற கோவை இன்ஜி., கல்லூரி மாணவருக்கு மெட்டா நிறுவனம் வெகுமதி அறிவித்து சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கான பட்டியலில் இணைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதாப்; கோவையில் உள்ள இன்ஜி., கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் கொண்ட பிரதாப், ethical hacking போன்றவற்றிலும் கற்று தேர்ந்துள்ளார்.
தொழில்நுட்ப ரீதியில் Zero day எனக் கூறப்படும் ஒரு சிக்கலை கண்டறிந்து, கவனம் பெற வைக்கும் செயலை செய்து காட்டியுள்ளார் பிரதாப்.
இன்ஸ்டா கமென்ட் பகுதியில் சைபர் தாக்குதல் நடத்தி பயனாளர் மட்டுமின்றி செயலியின் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்களால் கூட அந்தப் பகுதியை காண, அணுக முடியாத அளவிற்கு செய்யும் சிக்கலை கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இன்ஸ்டா கமெண்ட் பகுதியில் GIF - Graphic Interchange Format பாணியில் இந்த சைபர் தாக்குதல் நடத்துவதை அவர் கடந்த ஜூலை மாதம் மெட்டா நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று விளக்கியுள்ளார்.
இதையடுத்து அவரது செயலை பாராட்டும் விதமாக மெட்டா நிறுவனம் அவருக்கு வெகுமதி அறிவித்துள்ளது. மேலும் சிறந்த ஆராய்ச்சியாளர்களை கவுரவிக்கும் மெட்டா நிறுவனத்தின் Hall of Fame பட்டியலிலும் மாணவர் பிரதாப்பின் பெயரை இணைத்துள்ளது.