பள்ளி வாகனங்களை வேகமாக இயக்க வேண்டாம்; டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
பள்ளி வாகனங்களை வேகமாக இயக்க வேண்டாம்; டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
UPDATED : மே 06, 2025 12:00 AM
ADDED : மே 06, 2025 08:33 AM

தேனி :
பள்ளி வாகனங்களை அதிவேகத்தில் இயக்க கூடாது என டிரைவர்களுக்கு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் அறிவுரை வழங்கினார்.
தேனி ஆயுதப்படை மைதானத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் பள்ளி வாகனங்கள் சிறப்பு ஆய்வு பணி நடந்தது. கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தார். எஸ்.பி., சிவபிரசாத் முன்னிலை வகித்தார்.
பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், தேனி ஏ.எஸ்.பி., கேல்கர் சுப்பிரமணிய பாலசந்திரா, இடைநிலைக்கல்வி டி.இ.ஓ., வசந்தா, ஆர்.டி.ஓ., மாணிக்கம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஜெகதீஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாகனங்களை ஆய்வு செய்த பின் கலெக்டர் பேசுகையில், டிரைவர்கள் வாகனத்தில் உள்ள இடவசதிக்கு ஏற்ப மாணவர்களை ஏற்றி செல்ல வேண்டும்.
கூடுதலாக ஏற்றி செல்லக்கூடாது. அவர்களின் பாதுகாப்பு உங்கள் கையில் உள்ளது. பயணத்தின் போது ஜன்னல் வழியோ கைகளை வெளியே நீட்டக்கூடாது என கூறுங்கள். அதிவேகமாக இயக்காதீர்கள், உங்கள் உடல் நிலையை பாதுகாத்துக்கொள்ளுங்கள். முதல்வர் காப்பீட்டு திட்டம் இல்லாதவர்களுக்கு ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். வாகன ஆய்வு, டிரைவர்களுக்கான உடல் பரிசோதனை முகாம்கள் நடந்தது.
மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் 687 உள்ளன. நேற்று 200 வாகனங்கள் ஆய்வுக்கு வரவழைக்கப்பட்டு போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். மற்ற வாகனங்கள் அடுத்தடுத்த நாட்களில் ஆய்வு தொடரும்.

