கம்ப்யூட்டரில் தட்டச்சு தேர்வு நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்: வணிகவியல் பள்ளிகள் கோரிக்கை
கம்ப்யூட்டரில் தட்டச்சு தேர்வு நடத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும்: வணிகவியல் பள்ளிகள் கோரிக்கை
UPDATED : பிப் 11, 2026 02:06 PM
ADDED : பிப் 11, 2026 02:07 PM
ராமநாதபுரம்:
கம்ப்யூட்டரில் தட்டச்சு தேர்வு நடத்தும் தொழிற்கல்வி இயக்கத்தின் உத்தரவை அரசு திரும்ப வேண்டும். தட்டச்சு மிஷின் மூலம் தேர்வுகளை நடத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
இச்சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சரவணபவ உள்ளிட்ட நிர்வாகிகள், ராமநாதபுரத்தில் நடந்த தி.மு.க., தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.,யிடம் மனு அளித்தனர். இதில், தமிழகத்தில் 5000 தட்டச்சு பள்ளிகள் அரசு அங்கீகாரத்துடன் செயல்படுகிறது. தேர்வுகள் தட்டச்சு இயந்திரம் மூலம் நடக்கிறது.
இந்நிலையில் 2025 - 26ம் ஆண்டுகளில் நடைபெறும் தேர்வுகள் தட்டச்சு இயந்திரத்தில் நடைபெறும். அதன் பிறகு 2027 முதல் கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே தட்டச்சு தேர்வு நடத்தப்படும் என தொழிற்கல்வி இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த முடிவால் தட்டச்சு பொறி மெக்கானிக்குகள், அவர்களுடன் பல ஆயிரம் குடும்ப உறுப்பினர்கள், பயிற்சியாளர்கள் பலர் பாதிக்கப்படுவார்கள்.
மேலும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்படும். எனவே புதிய உத்தரவை ரத்து செய்து, பழைய முறைப்படி தட்டச்சு இயந்திரங்கள் மூலம் மட்டுமே தொழில்நுட்ப கல்வி இயக்கம் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

