அண்ணா பல்கலையில் அமைகிறது பொது பொறியியல் வசதி மையம்
அண்ணா பல்கலையில் அமைகிறது பொது பொறியியல் வசதி மையம்
UPDATED : ஆக 05, 2026 10:42 AM
ADDED : ஆக 05, 2026 10:46 AM

கோவை:
எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், 'ஸ்டார்ட் - அப்'கள் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சி, தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு உதவும் வகையில், அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில் பொது பொறியியல் வசதி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம், டாடா டெக்னாலஜீஸ் மற்றும் அண்ணா பல்கலை இணைந்து 5 ஏக்கரில் ரூ.300 கோடி மதிப்பில் இரண்டு கட்டங்களாக இம்மையம் அமைக்க திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக ரூ.115 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் ஐந்து ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சி.என்.சி., மற்றும் வி.எம்.சி., எந்திரங்களுடன் கூடிய மெஷின் ஷாப், தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம், 3டி பிரிண்டிங் வசதியுடன் கூடிய ஜெனரேட்டிவ் டிசைன் ஆய்வகம், கணினி வழி நிரலாக்கத்திற்கான மெஷின் ஷாப் சாப்ட்வேர் ஆய்வகங்கள், தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் ஆகியவை உள்ளன.
மையத்தின் வசதிகளை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் குறைந்த கட்டணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கல்லுாரி மாணவர்களுக்கு தொழில்துறை தரத்திலான பயிற்சி வழங்கவும், அவர்களின் ஆராய்ச்சி மற்றும் புதுமைத் திட்டங்களுக்காக இம்மையத்தின் வசதிகளை இலவசமாக பயன்படுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் மையம் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
