காலணி அணியாத மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதாக புகார்
காலணி அணியாத மாணவர்களை உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதாக புகார்
UPDATED : டிச 09, 2024 12:00 AM
ADDED : டிச 09, 2024 08:29 AM
சேலம் :
கெங்கவல்லி அரசு பள்ளிக்கு காலணி அணியாமல் வந்த மாணவர்களை, உடற்கல்வி ஆசிரியர் தாக்கியதாக புகார் எழுந்ததால் முதன்மை கல்வி அலுவலர் விசாரிக்கிறார்.
கனமழையால், 2 நாள் விடுமுறைக்கு பின், சேலம் மாவட்டம் கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நேற்று திறக்கப்பட்டது. காலையில், அதன் நுழைவாயிலில், உடற்கல்வி ஆசிரியர் சரவணன், ஷூ, காலணி அணிந்து வராதவர்கள், முடி திருத்தம் செய்யாத மாணவர்கள் சிலரை அடித்ததாக புகார் எழுந்தது.
இதனால், 10க்கும் மேற்பட்ட மாணவர்கள், நடுவலுார் சாலை, அரசு மருத்துவமனை பகுதியில் ஓடிவிட்டனர்.இதையறிந்த தலைமை ஆசிரியர் சாமுவேல், சில ஆசிரியர்களை அனுப்பி, ஓடிய மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரச்செய்தார்.
ஆனால், மாணவர்கள் ஓடியது, மருத்துவமனைக்குள் இருந்ததை சிலர் வீடியோ எடுத்து, சேலம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பினர். இதுதொடர்பாக, சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் விசாரிக்கிறார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் சாமுவேல் கூறுகையில், சீருடை, ஷூ, காலணி அணிந்து வராத மாணவர்களை, உடற்கல்வி ஆசிரியர் கண்டித்துள்ளார். இருப்பினும் தாக்கியதாக எழுந்த புகார் குறித்து ஆசிரியரிடம் விளக்கம் பெறப்பட்டுள்ளது. அவரது விளக்கத்துடன், நடந்த விபரம் குறித்து, முதன்மை கல்வி அலுவலருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
சேலம் முதன்மை கல்வி அலுவலர் கபீர் கூறுகையில், தலைமை ஆசிரியர் அறிக்கை கிடைத்த பின், நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.