நாயக்கர் கால செப்பு நாணயம்: அகழாய்வில் கண்டெடுப்பு
நாயக்கர் கால செப்பு நாணயம்: அகழாய்வில் கண்டெடுப்பு
UPDATED : ஜூலை 10, 2024 12:00 AM
ADDED : ஜூலை 10, 2024 09:51 AM

சிவகாசி:
விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல்குளம் 3ம் கட்ட அகழாய்வில், நாயக்கர் கால செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.
விஜயகரிசல்குளத்தில் 3ம் கட்ட அகழாய்வில், இதுவரையிலும் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, பெண்ணின் தலைப்பகுதி கண்ணாடி மணிகள், பழங்கால செங்கற்கள், வட்ட சில்லு, அகல் விளக்கு, எலும்புகள், தொங்கணி என, 400 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், நேற்று நாயக்கர் கால செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இதுபற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், ''இந்த நாணயம் கி.பி., 16ம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்தது.
இந்த நாணயத்தின் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும், பின்பக்கத்தில் ஸ்ரீ வீர என்ற தெலுங்கு எழுத்தும் பொறிக்கப்பட்டுள்ளது. பரவலாகக் காணப்படும் இவ்வகை நாணயங்களில் பொதுவாக, சிவபெருமான் அருகே பார்வதி தேவி அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், இதில் சிவபெருமானின் திருவுரும் தனித்து காணப்படுகிறது என்றார்.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுசாமி கூறுகையில், ஏற்கனவே நடந்த அகழாய்விலும், இதேபோன்று செப்பு நாணயங்கள் அதிக அளவில் கிடைத்தன. பல்வேறு மன்னர்களின் செப்பு நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததால், இங்கு அதிக அளவில் வணிகம் நடந்ததற்கான சான்று தெரிய வருகின்றது என்றார்.