கச்சா எண்ணெய் பயன்பாடு 18 சதவீதம் அதிகரிக்கிறது: மத்திய அமைச்சர்
கச்சா எண்ணெய் பயன்பாடு 18 சதவீதம் அதிகரிக்கிறது: மத்திய அமைச்சர்
UPDATED : ஏப் 09, 2024 12:00 AM
ADDED : ஏப் 09, 2024 11:59 AM
கோவை:
கோவை பி.எஸ்.ஜி., கன்வென்ஷன் மையத்தில், சி.ஐ.ஐ., யங் இண்டியன்ஸ் சார்பில், கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மத்திய நகர்ப்புற வீட்டுவசதி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது:
தற்போதுள்ள இளைய தலைமுறையினர், வளர்ச்சி பெற்ற இந்தியாவை காண முடியும். 2047ம் ஆண்டில் வளர்ச்சி பெற்ற இந்தியாவை உருவாக்குவதை, லட்சியமாக்கியுள்ளார் மோடி. சராசரியாக 21 வயதுள்ள இளைஞர்களுக்கு, இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் 10 ஆண்டுகளில் முன்னேற்றமடைந்து, 5வது பொருளாதார நாடாக மாறியுள்ளது. 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் ஏழ்மை நிலையிலிருந்து மீண்டுள்ளனர். மகளிர் முன்னேற்றமடைந்துள்ளனர். சர்வதேச அளவில் விமானம் ஓட்டும் மகளிர் பைலட்டுகளாக இந்திய பெண்கள் உள்ளனர்.
சட்டசபை, லோக்சபா தேர்தல்களிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு வரும்போது, நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக, மகளிர் இருப்பர். இந்தியா ஒவ்வொரு நாளும், 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 18 சதவீதம் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
85 சதவீதம் கச்சா எண்ணெயையும், 50 சதவீதம் இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்து வருகிறது. இந்த இறக்குமதி அளவை குறைக்க, அரசு புதிய எண்ணெய் வளங்களை கண்டறிந்து வருகிறது.
சாலையோர வியாபாரிகள் 83 லட்சம் பேருக்கு அரசு கடனுதவி அளித்துள்ளது. இந்திய அளவில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு கடந்த 10 ஆண்டுகளில், அறிவுசார்ந்த காப்புரிமைகள் அதிகம் பெறப்பட்டுள்ளன.
இந்தியாவை விரைவான பாதையில் வழி நடத்த, பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார். இவ்வாறு, அவர் பேசினார்.