UPDATED : மே 29, 2026 01:22 PM
ADDED : மே 29, 2026 01:24 PM

புதுடில்லி:
'பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஒத்திவைக்கப்பட்ட, 'க்யூட்' தேர்வு நாளை மறுநாளும், அடுத்த மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளிலும் நடக்கும்' என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைகள் மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லுாரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர ஆண்டுதோறும், 'க்யூட்' நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வை என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்தாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான, 'க்யூட்' தேர்வு முடிந்து, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இளநிலை பட்டப்படிப்புகளுக்கான, 'க்யூட்' தேர்வு, கடந்த 11ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று நடக்கவிருந்த ஒரு சில பாடங்களுக்கான தேர்வு பக்ரீத் பண்டிகையை ஒட்டி ஒத்திவைக்கப்படுவதாக என்.டி.ஏ., சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து என்.டி.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
பக்ரீத் பண்டிகையான மே 28ல் நடக்கவிருந்த சில பாடங்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டன. அன்றைய தினம் நடைபெற இருந்த தேர்வு, வரும் 31ம் தேதியும், அடுத்த மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளிலும் நடத்தப்படும்.
நாளை மறுதினம் நடக்கவுள்ள தேர்வுக்கான 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான cuet.nta.nic.in என்ற முகவரியில் மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
