இளைஞர்களை வதைக்கும் கடன் சுமை: ஆய்வறிக்கைகளில் அதிர்ச்சி தகவல்
இளைஞர்களை வதைக்கும் கடன் சுமை: ஆய்வறிக்கைகளில் அதிர்ச்சி தகவல்
UPDATED : ஜன 16, 2026 09:40 PM
ADDED : ஜன 16, 2026 09:42 PM

இந்தியாவில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே, கடன் திருப்பிச் செலுத்தும் திறன் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இளம் வயதினர் வாங்கும் கடன்கள் மற்றும் அவை திருப்பிச் செலுத்தப்படும் விதம் குறித்து 'கிரிப் ஹை மார்க்' ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு, கார் மற்றும் இருசக்கர வாகன கடன்களில் இளம் வயதினரிடம் நிலுவை அதிகம் காணப்படுகிறது.
2025, நவம்பர் நிலவரப்படி, 25 வயதிற்குட்பட்டவர்களிடம் 2.60 சதவீதம் மற்றும் 26 - 30 வயதுள்ளவர்களின் பிரிவில் 2.70 சதவீதம் கடன்கள் செலுத்தப்படாமல் உள்ளன. உத்தர பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் கடன் பெறும் இளைஞர்கள் அதிகம். இளம் வயதில் அதிக கடன் எதிர்கால நிதி நிலைத்தன்மைக்கு சவாலாக இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு இல்லை
கடன் சுமை காரணமாக இந்தியர்கள் மனச்சோர்வு, துாக்கமின்மை, தற்கொலை எண்ணம் போன்ற தீவிர மனநலப் பாதிப்புகள் ஏற்படுவதாக மற்றொரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ரிசர்வ் வங்கியின் வங்கி குறைதீர்ப்பாளர் மையம் போன்ற வசதிகள் இருந்தாலும், பெரும்பாலான கடனாளிகளுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் சில புள்ளிவிபரங்கள்:
* கடன் வாங்கியவர்களில், மாத வருமானத்தில் 40%க்கும் அதிகமான பணத்தை, கடன் தவணைக்கு செலுத்துபவர்கள்: 85%
* மளிகை, மின்சாரம், கல்வி, மருத்துவ செலவுகளுக்கே பணமின்றி தவிப்பவர்கள்: 40%
* ஒரு கடன் அட்டையின் நிலுவையை செலுத்த, மற்றொரு அட்டையை பயன்படுத்துபவர்கள்: 65%
* கல்வியை நிறுத்துவது, சிகிச்சையை தள்ளிப்போடுவது, உணவுக்கான செலவைக் குறைப்பவர்கள்: 15%
* கடனை அடைக்க தங்கம், சொத்து, சேமிப்பகளை விற்பனை செய்பவர்கள்: 72%
ஆதாரம்:
எக்ஸ்பர்ட் பேனல்

