கல்வி முறையை மாற்ற உறுதியான நடவடிக்கை தேவை; சொல்கிறார் ராகுல்
கல்வி முறையை மாற்ற உறுதியான நடவடிக்கை தேவை; சொல்கிறார் ராகுல்
UPDATED : ஜூலை 26, 2026 10:41 AM
ADDED : ஜூலை 26, 2026 10:42 AM
புதுடில்லி:
'நாட்டின் கல்வி முறை முழுமையாக சீரழிக்கப்பட்டுள்ளது. கல்வி முறையை மாற்றுவதற்கு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்,' என்று லோக் சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
இது மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி. ஒரு காலத்தில் உலக நாடுகளால் போற்றப்பட்ட நமது கல்வி முறை, கடந்த சில ஆண்டுகளாக தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இது படிப்படியாக தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது. ஊழல் மற்றும் கல்வி முறை சீரழிவின் அடையாளமாக தர்மேந்திர பிரதான் இருந்துள்ளார். இந்தியாவின் கல்வி முறையை ஆர்.எஸ்.எஸ்., கைப்பற்றியிருப்பது மிகப்பெரிய பிரச்னையாகும்.
நமது கல்வி முறை முழுமையாக சீரழிக்கப்பட்டுள்ளது. கல்வி முறையை மாற்றுவதற்கு அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை பார்லியில் ஒரு முக்கியப் பிரச்னையாக எழுப்புவோம். மாணவர்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாம் இப்போது கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளோம். இந்த நெருக்கடி காலத்தில் கல்வி முறை, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை முக்கியத்துவம் பெறுகின்றன. இதுவரையில் நீங்கள் ஆட்சி செய்த விதத்தின் அடிப்படையில், இனி இந்தியாவை வழிநடத்த முடியாது என்பதற்கான எச்சரிக்கை தான் இந்த மாணவர்களின் போராட்டம். நீங்கள் இதே பாதையில் தொடர்ந்தால், இப்போது நடந்ததை விட பத்து மடங்கு அதிகம் பின்விளைவுகள் ஏற்படும்.
மாணவர்களுக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும், அதனை செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். மாணவர்களையும், நாட்டின் எதிர்காலத்தையும் பாதுகாக்க நாங்கள் இங்கு இருக்கிறோம். இது மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ்.,க்கும், இந்தியாவின் எதிர்காலத்திற்கும் இடையே நடக்கும் போராகும். இதில், இந்தியாவின் எதிர்காலம் வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
