UPDATED : ஜூலை 16, 2026 09:57 AM
ADDED : ஜூலை 16, 2026 09:58 AM
சென்னை:
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில், இரண்டு முறை நடத்தப்படுகிறது.
மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்ளும் வகையில், இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, இரண்டாவது பொதுத் தேர்வு, கடந்த மே 15 முதல், 21ம் தேதி வரை நடந்தது. தேர்வு முடிந்து 50 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில், முடிவுகள் வெளியீடு தாமதமாகி வருகிறது.
நாடு முழுதும், பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடந்து, நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு இரண்டாவது பொதுத் தேர்வு முடிவுகள் தாமதமாகி வருவது, மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
விரைவில், இரண்டாவது பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட, சி.பி.எஸ்.இ., வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
