ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்
ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளியை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்
UPDATED : மே 19, 2026 04:44 PM
ADDED : மே 19, 2026 04:47 PM
செய்யூர்:
கரிக்கந்தாங்கல் கிராமத்தில் 2 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல அரசு ஆரம்பப் பள்ளியை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
சித்தாமூர் அடுத்த முகுந்தகிரி ஊராட்சிக்கு உட்பட்ட கரிக்கந்தாங்கல் கிராமத்தில் 1974ம் ஆண்டில் இருந்து ஆதிதிராவிடர் நல அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வந்தது.
கரிக்கந்தாங்கல், முகுந்தகிரி, புத்துார் உள்ளிட்ட கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் இந்த பள்ளியில் பயின்று, பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயர் பதவியில் உள்ளனர்.
தனியார் பள்ளிகளுக்கு படையெடுத்து வருவதால், மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்தது. 2023 - 24ம் கல்வி ஆண்டில் இந்த பள்ளியில் 4 மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர்.
இங்கு பயின்ற முன்னாள் மாணவ மாணவியர் பள்ளி 50ம் ஆண்டு பொன்விழாவை கொண்டாடத் தயாராகி வந்த நிலையில், 2024 - 25ம் கல்வி ஆண்டில் பள்ளியில் படித்த வந்த 4 மாணவர்களையும் அவர்களின் பெற்றோர் தனியார் பள்ளியில் சேர்த்தனர். மாணவர்களின் சேர்க்கை குறைந்ததால், 2 ஆண்டுகளுக்கு முன் இப்பள்ளி மூடப்பட்டது.
தற்போது கரிக்கந்தாங்கல் கிராமத்தில் இருந்து 1 முதல் 5ம் வகுப்பு வரை 40 மாணவ, மாணவியர் சித்தாமூர், நீர்பெயர், பூரியம்பாக்கம் ஆகிய பகுதியில் இயங்கும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், குழந்தைகளின் பெற்றோரிடம் கலந்தாய்வு செய்து, குழந்தைகளை மீண்டும் அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி கரிக்கந்தாங்கல் ஆதிதிராவிடர் நல அரசு ஆரம்பப் பள்ளியை செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மக்கள் எதிர்பார்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் தேவலிங்கம் கூறியதாவது:
கரிக்கந்தாங்கல் கிராமத்தில் 50 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் நல அரசு ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வந்தது. போதிய மாணவர்கள் இல்லை எனக்கூறி கடந்த 2024ம் ஆண்டு பள்ளி மூடப்பட்டது.
இதனால் ஏழை எளிய மக்கள் கல்வி பயில 5 கிலோமீட்டர் துாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது, தற்போது கரிக்கந்தாங்கல் கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உள்ளனர். மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
