UPDATED : ஜூன் 22, 2024 12:00 AM
ADDED : ஜூன் 22, 2024 10:32 AM
குன்னுார்:
உமரி காட்டேஜ் பகுதியில் பள்ளியை இடித்து ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் இடத்தில் நீரூற்று தடுக்க கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் உமரி காட்டேஜ் பகுதியில் நகராட்சி ஆரம்பப்பள்ளி இருந்தது. இந்த பள்ளியில் படித்த பலரும் பல்வேறு இடங்களில் உயர் பதவிகள் வகித்து வருகின்றனர். இந்நிலையில், நகராட்சி சார்பில், 1.10 கோடி ரூபாய் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம் கட்ட முடிவு செய்யப்பட்டு ஆரம்ப பணிகள் நடந்து வருகிறது.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,சமீபகாலமாக குன்னுார் பகுதியில் அரசு கட்டடங்கள் இடிக்கப்பட்டு நகராட்சி நிதியில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில், நீலகிரியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பள்ளி மூடப்பட்டு, ஆரம்ப சுகாதார மைய பணிகள் நடக்கிறது. இப்பணிகளால் இங்குள்ள நீரூற்று மற்றும் பாறைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது, என்றனர்.
கவுன்சிலர் சரவணகுமார் கூறுகையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் இங்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. பாறைகள் மற்றும் நீரூற்று உள்ள இடங்களை அழிக்காமல் இருக்க, நகராட்சிக்கு தெரிவிக்கப்படும். மேற்பகுதியில் கழிவு நீர் இந்த பகுதிக்கு வரும் சூழ்நிலை உள்ளதால், தடுப்பு சுவர் எழுப்பவும் கமிஷனரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.