UPDATED : மார் 04, 2026 07:06 PM
ADDED : மார் 04, 2026 07:08 PM

சமீபகாலமாக, தொழில் மற்றும் 'ஸ்டார்ட்-அப்'கள் இணையும் புதிய முறைமைகள் உருவாகி வருகின்றன. நிறுவனங்கள் தங்கள் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்னைகள் குறித்த அறிக்கைகளை பகிர, அதற்கேற்ற தீர்வுகளை வழங்கும் 'ஸ்டார்ட்-அப்'களுடன் இணைக்கும் தளங்கள் உருவாக்கப்படுகின்றன. இது புதுமையானதோடு மட்டுமின்றி, தொழில்முனைவோர்களுக்கு ஊக்கம் அளிக்கும் ஒரு அம்சம்.
டீப்-டெக் (Deep-Tech) நிறுவனங்கள் பிற தொழிலைப்போன்று அல்லாமல், பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் விஞ்ஞான மையங்களில் நடைபெறும் ஆராய்ச்சிகளிலிருந்தே உருவாகின்றன. ஆகவே, இந்தியாவில் வலுவான ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவுக்கான சுற்றுச்சூழல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஆராய்ச்சி நிலையிலிருந்து புதுமையான பொருட்களாகவும், தொழில்நுட்பத்திலிருந்து வலுவான டீப்-டெக் சுற்றுச்சூழலாகவும் இந்தியா மேம்பட வேண்டும்.
ஏற்கனவே, இந்திய ஸ்டார்-அப் நிறுவனங்கள் அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்து வரும் நிலையில், இத்தகைய சூழல் உருவானால் அது இந்தியாவிலிருந்து மட்டுமின்றி, உலகம் முழுவதிலிருந்தும் முதலீடுகளை ஈர்க்கும்.
ஏ.ஐ.,யின் வருகையால் வேலை இழப்புகள் குறித்த அச்சம் பரவலாக காணப்படுகிறது. ஏ.ஐ., மற்றும் தானியக்க தொழில்நுட்பங்கள் ஐடி துறையில் குறுகிய காலத்தில் சில எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். அடுத்த இரண்டு ஆண்டுகளில், ஐ.டி., துறையில் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கையில் சரிவு காணப்படலாம். குறிப்பாக பி.பீ.ஓ.,(BPO) துறையில் வேலைகள் குறையக்கூடும். இருப்பினும், நீண்ட காலத்தில் ஐடி சேவைகள் வளர்ச்சியடைந்து மொத்த வேலைவாய்ப்புகள் உயர வாய்ப்பு உள்ளது.
வரும் காலங்களில் வேலை வாய்ப்புகள் மீதான் அச்சம் குறைய, இளம் மாணவர்கள் விரைவாக ஏ.ஐ., திறன்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். தற்போதைய ஐடி ஊழியர்களும் ஏ.ஐ., கருவிகளில் பயிற்சி பெறுவது அவசியம்.
ஆராய்ச்சி, புதுமை, தொழில்முனைவு சங்கிலியை வலுப்படுத்தி ஏ.ஐ., மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடு அதிகரித்தால், இந்தியா 2047க்குள் வளர்ந்த நாடாக மாறும்.
நாம் எவ்வாறு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 'ஆபீஸ்', 'வேர்ட்பிரசாசர்' போன்ற மென்பொருள் கருவிகளைப் பயன்படுத்த கற்றுக்கொண்டோமோ, அது போலவே நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று தான் ஏ.ஐ.,
-கிரிஷ் கோபாலகிருஷ்ணன், இணை நிறுவனர், இன்போசிஸ்

