12 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க பள்ளி, அங்கன்வாடிகளில் மருந்து
12 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க பள்ளி, அங்கன்வாடிகளில் மருந்து
UPDATED : ஆக 11, 2025 12:00 AM
ADDED : ஆக 11, 2025 09:01 AM
கோவை:
கோவையில் பொது சுகாதாரத்துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, அதற்கான மாத்திரை வழங்க, பள்ளி, கல்லுாரிகள், அங்கன்வாடி மையங்களில், இன்று முகாம் நடைபெறவுள்ளது.
உலக மக்கள் தொகையில், 24 சதவீதம் பேர் மண் வாயிலாக, பரவும் குடற்புழு தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தொகையில், 1 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழித்தால் கூட, அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மண் வாயிலாகவும், மண்ணில் விளையும் பொருட்கள், மண்ணில் கை, கால்கள் படுவதன் வாயிலாகவும், தொற்று ஏற்படலாம்.
இதனால், குடற்புழு நீக்கும் திட்டம் ஆண்டு இருமுறை என்ற அடிப்படையில், 2015ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில், 1,697 அங்கன்வாடி மையங்கள், 985 தனியார் பள்ளிகள், 1,070 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், 150 கல்லுாரிகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்கள் வாயிலாக, அல்பெண்டாசோல் என்னும் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்படவுள்ளது.
மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:
கோவையில், ஒன்று முதல் 19 வயதுக்கு உட்பட்ட 9.55 லட்சம் குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயது வரையுள்ள 2.66 லட்சம் பெண்கள் (கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் தவிர்த்து) என மொத்தம், 12 லட்சத்து 22,882 பயனாளிகள் இந்த திட்டம் வாயிலாக பயன டைய உள்ளனர். 11ம் தேதி விடுபடுபவர்களுக்கு 18ம் தேதி மருந்து வழங்கப்படும்.
குடற்பு ழு நீக்க மருந்து உணவு உட்கொண்ட பின்னர், நன்றாக சப்பி மென்று விழுங்கவேண்டும்; பின்னர் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்படியே விழுங்க கூடாது.
இவ்வாறு, அவர் கூறினார்.

