தினமலர் பட்டம் வினாடி - வினா பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
தினமலர் பட்டம் வினாடி - வினா பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
UPDATED : ஜன 26, 2026 08:42 PM
ADDED : ஜன 26, 2026 08:44 PM

புதுடில்லி:
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் நடத்தும் வினாடி - வினா நிகழ்ச்சிக்கு, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டும், பெருமிதமும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கை:
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ், வினாடி - வினா 2025 - 26 நிகழ்ச்சி நடத்தி வருவதை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த புதிய முயற்சியில் பங்கேற்றுள்ள ஒவ்வொருவருக்கும் மனமார்ந்த பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்தவொரு பகுதியின் வளர்ச்சிக்கும், துடிப்பான, பொறுப்புமிக்க ஊடகம் தான் மையமாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளில் வெளிவரும் முன்னணி நாளிதழ்கள், பல்வேறு சமூகத்தினரை சென்றடைவதிலும், தகவலறிந்த ஒரு சமூகத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்றுகின்றன.
அந்த வகையில், 'தினமலர்' நாளிதழ், வினாடி - வினா போன்ற அறிவு சார்ந்த போட்டிகளை நடத்துவது பாராட்டுக்குரியது. இது, போட்டி என்பதை கடந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி இளைஞர்களுக்கு அறிவு, ஆர்வம், நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை ஊட்டுகிறது.
இப்போட்டியில் அர்ப்பணிப்பு, முன் தயாரிப்பு மற்றும் அறிவுத் திறனுடன் பங்கேற்று விருது வென்ற அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இப்போட்டியில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள், இறுதி வரை வந்த போட்டியாளர்கள், அமைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய காரணமான அனைவரையும் பாராட்டுகிறேன்.
இந்நிகழ்ச்சியில் இளம் தலைமுறையினர் ஆர்வமுடன் பங்கேற்றதாக அறிகிறேன். அவர்களுக்காக சில அறிவுரைகளை கூற விரும்புகிறேன்.
நீங்கள் அனைவரும் உங்கள் பள்ளி, வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் சுற்றுச்சூழலுக்கான துாதராக செயல்பட வேண்டும். 'மிஷன் லைப்' எனப்படும் வாழ்க்கை முறைக்கான சுற்றுச்சூழலை பேணி காக்கும் திட்டத்தை பின்பற்ற வேண்டும். இந்த திட்டம் தண்ணீர் மற்றும் மின்சார சேமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மறுப்பு, மறுசுழற்சி மூலம் கழிவுகளை குறைப்பது ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
தற்போது நாடு முழுதும் போதைப் பொருளுக்கு அடிமையாவது தான் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. எனவே, மாணவர்களும், இளம் தலைமுறையினரும் போதைக்கு எதிரான பிரசாரத்தை பரப்ப வேண்டும். குறிப்பாக போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல், அதில் இருந்து இளம் தலைமுறையினர் விலகி இருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் தொடர்ந்து கற்றலை கடைப்பிடிக்க வேண்டும். கேள்விகள் கேளுங்கள்; அதன் வாயிலாக அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

