பிளஸ் 2 முடிவில் அதிருப்தியா? மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க சி.பி.எஸ்.இ., அறிவுரை
பிளஸ் 2 முடிவில் அதிருப்தியா? மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிக்க சி.பி.எஸ்.இ., அறிவுரை
UPDATED : மே 18, 2026 11:09 PM
ADDED : மே 18, 2026 11:12 PM

சென்னை:
'பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் அதிருப்தி அடைந்துள்ள மாணவர்கள், மறுமதிப்பீடு கேட்கலாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பலர், தங்களின் மதிப்பெண்கள் குறித்து கவலை கொண்டிருப்பதாகவும், அதற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட, ஓ.எஸ்.எம்., என்ற விடைத்தாள் மதிப்பீட்டு முறையே காரணம் என்றும் கூறப்படுகிறது.
சி.பி.எஸ்.இ., தேர்வு வாரியம், மாணவர்களின் இந்த கவலையை மிகவும் உணர்வுப்பூர்வமாக எடுத்துக் கொள்கிறது. மாணவர்களின் நலனில், சி.பி.எஸ்.இ., அக்கறை கொண்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட விடைத்தாள் திருத்தம் நடைமுறை, அனுபவமிக்க சி.பி.எஸ்.இ., ஆசிரியர்கள் தயாரித்த மதிப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில், ஒரே மாதிரியான மற்றும் சீரான மதிப்பீட்டை உறுதி செய்கிறது.
மேலும், அந்த மதிப்பீட்டு திட்டத்தில், மாற்று முறைகளில் எழுதப்பட்ட பதில்களுக்கும், மதிப்பெண் பெறும் வகையில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தங்களின் தேர்வு முடிவில் திருப்தி இல்லையெனில், மதிப்பெண் சரிபார்ப்பு, மதிப்பிடப்பட்ட விடைத்தாள்களை பார்வையிடுதல் மற்றும் மறுமதிப்பீடு கேட்கலாம்.
தேர்வு முடிவுகள் தொடர்பாக, கவலை அடைந்துள்ள மாணவர்களுக்கு, 1800 - 11 - 8004 என்ற தொலைபேசி எண் வாயிலாக ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், resultcbse2026@gmail.com என்ற, மின்னஞ்சல் வாயிலாகவும், மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில், 2024 - 25ம் கல்வியாண்டில், சி.பி.எஸ்.இ., 10 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுக்கு பின், விடைத்தாள் நகல், மறுமதிப்பீடு கேட்டு விண்ணப்பித்த வகையில், சி.பி.எஸ்.இ., வாரியத்துக்கு, 23 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
