செய்தித்தாள் படிக்க தவறாதே! போட்டித் தேர்வில் பங்கேற்போருக்கு அட்வைஸ்
செய்தித்தாள் படிக்க தவறாதே! போட்டித் தேர்வில் பங்கேற்போருக்கு அட்வைஸ்
UPDATED : அக் 02, 2024 12:00 AM
ADDED : அக் 02, 2024 09:39 AM

திருப்பூர்:
திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாக நான்காவது தளத்தில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர் சுந்தரவல்லி நேற்று ஆய்வு நடத்தினார்.
அப்போது, போட்டித்தேர்வர்கள் மத்தியில் பேசியதாவது:
போட்டித்தேர்வுக்கு தயாராவோர், தினசரி நாளிதழ்களை தவறாமல் படிக்கவேண்டும். செய்தித்தாள்களில் வெளியாகும் முக்கியமான அம்சங்களை குறிப்பெடுத்துக்கொள்ளவேண்டும்; தேவைப்பட்டால் தனியே ஒரு நோட்டில் செய்திகளை ஒட்டி வைக்க வேண்டும்.
செய்திகளை ஆழமாக வாசிப்பதால், போட்டித்தேர்வுக்கு தேவையான ஏராளமான தகவல்கள் கிடைக்கும். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடங்களை முழுமையாக படித்து வைத்திருக்க வேண்டும். பள்ளிகளில் குறிப்பிட்ட மதிப்பெண் எடுத்தால் போதுமானது. ஆனால், போட்டித்தேர்வில், ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியத்துவம் வாய்ந்தது.
தேர்வுக்கு தயாராவோரிடம் கவனச்சிதறல் ஒருபோதும் இருக்க கூடாது.
தன்னம்பிக்கையோடு, முழு கவனம் செலுத்தி படித்தால், போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று, நல்ல பதவியை அடையலாம். திருப்பூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் தேர்வுக்கு படித்து அதிகளவிலானோர் தேர்ச்சி பெறுவது, பாராட்டத்தக்கது.
இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் செய்தி சுட்டிக்காட்டிய கமிஷனர்
தினமலர் நாளிதழ் 14வது பக்கத்தில், சந்திரயான் - 3 தரையிறங்கிய நிலவின் பழமையான பள்ளம் குறித்த செய்தி வெளியாகியிருந்தது. இதனை சுட்டிக்காட்டும் வகையில், கமிஷனர் சுந்தரவல்லி, கிரேட்டர்னா என்னனு தெரியுமா?' என கேள்வி எழுப்பினார்.
ஆனால், யாருக்கும் பதில் தெரியவில்லை. நிலவின் மீது விண்கல் மோதும்போது பள்ளம் ஏற்படுகிறது. நிலவின் மிக பழமையானதுதான், கிரேட்டர் பள்ளம் என கமிஷனரே விளக்கம் அளித்தார். போட்டித்தேர்வுக்கு தயாராவோர் செய்தித்தாளில் வெளியாகும் இதுபோன்ற முக்கியமான விஷயங்களை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என கமிஷனர் அறிவுறுத்தினார்.