பொருளாதார ஆய்வு 2025 - 26: குறையும் வேலையின்மை, பெருகும் வாய்ப்புகள்!
பொருளாதார ஆய்வு 2025 - 26: குறையும் வேலையின்மை, பெருகும் வாய்ப்புகள்!
UPDATED : ஜன 31, 2026 11:00 AM
ADDED : ஜன 31, 2026 11:03 AM

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 - 26ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் இந்தியாவின் வேலைவாய்ப்பு வளர்ச்சி மற்றும் தொழிலாளர் நலன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக நாட்டில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
வேலை தேடுவோரையும், வேலை வழங்குவோரையும் இணைக்கும் பாலமாக 'தேசிய வேலைவாய்ப்பு சேவை' செயல்படுகிறது. 2015ல் தொடங்கப்பட்ட இந்தத் தளத்தில் இதுவரை 5.9 கோடி வேலை தேடுவோரும், 53 லட்சம் வேலை வழங்குவோரும் இணைந்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் சரியான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுவதால் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 2017 - 18 ஆம் ஆண்டில் 5.6 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம், தற்போது 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதையடுத்து, கட்டுமானத் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பதில் 'இ-ஷ்ரம்' போர்டல் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதுவரை 31 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் இதில் பதிவு செய்துள்ளனர். இதில் பதிவு செய்துள்ளவர்களில் 54 சதவீத பேர் பெண்கள்.
இதைத் தொடர்ந்து, வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. பெண்கள் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 23.3 சதவீதத்திலிருந்து 41.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்கள் அலுவலகப் பணி மட்டுமின்றி, வீட்டுப் பராமரிப்புப் பணிகளிலும் அதிக நேரம் செலவிடுவதால், அவர்களுக்கு 'நெகிழ்வான வேலை நேரம்' தேவைப்படுவதை இந்த ஆய்வு அங்கீகரித்துள்ளது.
மேலும், ஆன்லைன் டெலிவரி, ஃப்ரீலான்சிங் போன்ற 'கிக்' பணிகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது. 2021 முதல் 2025 வரை 'கிக்' தொழிலாளர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் சுயதொழில் மற்றும் சிறுதொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 12.9 கோடி பேர் விவசாயம் அல்லாத சிறுதொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கவும், அதே சமயம் நிறுவனங்கள் எளிதாகத் தொழில் செய்யவும் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் வழிவகை செய்கின்றன. இவை தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றவாறு பணிச்சூழலை மாற்றியமைக்க உதவுகின்றன.

