இன்ஜி., 3ம் சுற்று கலந்தாய்வு 12,346 மாணவர்கள் வெளியேறினர்
இன்ஜி., 3ம் சுற்று கலந்தாய்வு 12,346 மாணவர்கள் வெளியேறினர்
UPDATED : ஆக 25, 2026 09:09 AM
ADDED : ஆக 25, 2026 09:13 AM

சென்னை:
இன்ஜினியரிங் மூன்றாம் சுற்று கலந்தாய்வில், தற்காலிக ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்களில், 12,346 பேர் அதை உறுதி செய்யாமல், கலந்தாய்வில் இருந்து வெளியேறி உள்ளனர்.
அண்ணா பல்கலையின் கீழ், 418 இன்ஜினியரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, கடந்த, 13ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
தற்போது, மூன்றாம் சுற்று கலந்தாய்வு நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. மூன்றாம் சுற்று கலந்தாய்வில் பங்கேற்க, ஒரு லட்சத்து, 2,719 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு, தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை கடந்த, 21ம் தேதி வெளியிடப்பட்டது. பொதுப்பிரிவில், 66,159 மாணவர்கள்; 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 2,481 மாணவர்கள் என, மொத்தம் 68,640 பேருக்கு பி.இ., பி.டெக்., படிப்புக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், தற்காலிக ஒதுக்கீட்டை உறுதி செய்த மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீட்டு ஆணை நேற்று வெளியிடப்பட்டது. பொதுப்பிரிவில், 54,684 பேர்; 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 1,610 பேர் என, மொத்தம் 56,294 பேருக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களில், 6,621 மாணவர்கள், கல்லூரியை உறுதி செய்து, மேல்நோக்கு நகர்வுக்காக காத்திருக்கின்றனர்.
