இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி; வரும் 28, 29ல் நடத்துகிறது தினமலர்
இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி; வரும் 28, 29ல் நடத்துகிறது தினமலர்
UPDATED : ஜூன் 25, 2025 12:00 AM
ADDED : ஜூன் 25, 2025 08:38 AM

சென்னை:
பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர, காத்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு உதவ, தினமலர் நாளிதழ் சார்பில், வரும் 28, 29ம் தேதிகளில், சென்னை தாம்பரம் மற்றும் அண்ணா நகரில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி நடக்க உள்ளது.
தமிழக அரசு, தொழில்நுட்ப கல்வி இயக்கக இணையதளமான டி.என்.இ.ஏ., வாயிலாக, இன்ஜினியரிங் படிப்புகளுக்கான சேர்க்கையை நடத்துகிறது.
அதாவது, பி.இ., பி.டெக்., படிக்க விரும்புவோருக்காக, தினமலர் நாளிதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்துடன் இணைந்து, இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சியை, சென்னை, தாம்பரம் ராஜகோபால திருமண மகாலில், வரும் 28ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடத்துகிறது.
இதே நிகழ்ச்சி, அண்ணா நகர் மேற்கு, எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மற்றும் ஜூனியர் கல்லுாரி வளாகத்தில், 29ம் தேதி, காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்க உள்ளது.
அதாவது, அண்ணா பல்கலை கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, இளநிலை பட்டப்படிப்புகளுக்கான இடங்களும், தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களும், கவுன்சிலிங் வாயிலாக நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில், நவீன தொழில்நுட்ப படிப்புகளில் உள்ள வேலை வாய்ப்புகள், கோர் இன்ஜினியரிங் துறைகளின் எதிர்காலம், சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைமுறைகள், கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்யும் விதம், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புள் உள்ளிட்டவற்றுக்கு, கல்வி ஆலோசகர்கள் அஸ்வின், ரமேஷ் பிரபா ஆகியோர், வழிகாட்டி நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்க உள்ளனர்.
மேலும், ஆன்லைன் கவுன்சிலிங் நுணுக்கங்கள், சரியாக சாய்ஸ் பில்லிங் பதிவிடுவதற்கான வழிமுறைகள், புரோவிஷனல் அலாட்மென்ட் பெறுவது உள்ளிட்ட தகவல்களை, ஸ்ரீரங்கம் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி உதவி பேராசிரியர் ஜே.காளிதாஸ் வழங்க உள்ளார். இதில், மாணவர்கள், தங்களின் பெற்றோருடன் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.