பரதநாட்டியம், சமூக சேவையில் அசத்தும் இன்ஜினியரிங் மாணவி
பரதநாட்டியம், சமூக சேவையில் அசத்தும் இன்ஜினியரிங் மாணவி
UPDATED : ஜூலை 29, 2024 12:00 AM
ADDED : ஜூலை 29, 2024 11:44 PM
பெங்களூரு ஹலசூரு ஏரிக்கரையில் உள்ளது லேக்வியூ மஹா கணபதி கோவில்.
இந்த கோவிலின் அர்ச்சகராக இருப்பவர் சுப்பிரமணிய சாஸ்திரி. இவரது மனைவி நளினி. இந்த தம்பதியின் மூத்த மகள் அஸ்வினி பிரியா. எம்.பி.பி.எஸ்., படிக்கிறார். இளைய மகள் அன்விதா பிரியா, 21.
ஒயிட்பீல்டில் உள்ள தனியார் கல்லுாரியில் 3ம் ஆண்டு பி.இ., படித்து வருகிறார்.
இவர் பரதநாட்டியத்தில் அசத்தி வருகிறார். பெங்களூரு நகரில் 200க்கும் மேற்பட்ட கோவில்களில் நடந்த நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடி இருக்கிறார். இதற்காக பல விருதுகளையும் வாங்கி உள்ளார்.
மறக்க முடியாத தருணம்
பரதநாட்டிய பயணம் குறித்து அன்விதா பிரியா பெருமையுடன் கூறியதாவது:
எனக்கு 5 வயதாக இருக்கும்போது, பரதநாட்டியம் ஆட வேண்டும் என்று ஆசை வந்தது. இதுகுறித்து எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். பெங்களூரு தமிழ்ச்சங்கத்தில் நடந்த பரதநாட்டிய வகுப்பில், என்னை சேர்த்து விட்டனர்.
அப்போது இருந்து எனது பரதநாட்டிய பயணம் ஆரம்பித்தது. தற்போது மிதுன் ஷாம் என்பவர் எனக்கு குருவாக உள்ளார். விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது, விநாயகர் கோவில்களில் நடக்கும் பரதநாட்டிய நிகழ்ச்சியில், பரதநாட்டியம் ஆடி இருக்கிறேன்
சிருங்கேரி சாரதாம்பா கோவில், பானஸ்வாடியில் உள்ள சுரபாரதி கோவில்களில் பரதநாட்டியம் ஆடியுள்ளேன். சின்மயா மிஷன் குருக்களிடம் இருந்து விருது வாங்கியது, என் வாழ்வில் மறக்க முடியாத தருணம்.
கர்நாடக சங்கீதம்
பரதநாட்டியம் மட்டும் இன்றி, கர்நாடக சங்கீதமும் கற்று உள்ளேன். ஓவியங்கள் வரைவதிலும் ஆர்வம் அதிகம். சமூக சேவை செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கொரோனா நேரத்தில் நானும், எனது நண்பர்களும் சேர்ந்து ஒரு குழு அமைத்தோம். ஊரடங்கால் வெளியே வர முடியாமல், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வழியின்றி சிரமத்தில் இருந்த மக்களுக்கு, எங்களால் முயன்ற உதவிகளை செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.