UPDATED : ஜூன் 11, 2024 12:00 AM
ADDED : ஜூன் 11, 2024 06:11 PM

புதுடில்லி:
இந்திய பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு இரு முறை மாணவர்களை சேர்த்துக் கொள்ள பல்கலை மானியக் குழு(யுஜிசி) அனுமதி வழங்கி உள்ளது. உலகளவில் பின்பற்றப்படும் நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
யுஜிசி தலைவர் மமிதாலா ஜெகதீஸ் குமார் கூறியதாவது:
உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை ஆண்டுக்கு இரு முறை நடத்தி கொள்ளலாம். இது அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். ஜன., பிப்., மற்றும் ஜூலை ஆக., மாதங்களில் மாணவர் சேர்க்கை நடக்கும். இதனால், தேர்வு முடிவு, உடல்நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களினால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கு ஏதுவாக இருக்கும். கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்கள் காத்திருக்கும் காலமும், நேரமும் குறையும்.
பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், இனிமேல் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களில் இரண்டு முறை கேம்பஸ் இண்டர்வியூ நடத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சர்வதேச பல்கலைகளில் இதே நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனை பின்பற்ற இந்தியாவிலும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதை அமல்படுத்துவது கட்டாயமில்லை. அந்தந்த உயர் கல்வி நிறுவனங்களின் முடிவு ஆகும். அமல்படுத்தும் நிறுவனங்கள் இதற்கு ஏற்ப விதிகளை திருத்த வேண்டும்
முன்னதாக, திறந்த வெளி மற்றும் தொலைதூர படிப்புகளுக்கு ஆண்டுக்கு இரு முறை மாணவர்களை சேர்க்க யுஜிசி அனுமதி வழங்கி இருந்தது. இதில், ஏராளமான மாணவர்கள் பலன் பெற்றது தெரியவந்ததைத் தொடர்ந்து, வழக்கமான படிப்புகளுக்கும் இதனை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

