கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப எதிர்பார்ப்பு
கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப எதிர்பார்ப்பு
UPDATED : ஜூலை 24, 2026 08:27 PM
ADDED : ஜூலை 24, 2026 08:29 PM
விருதுநகர்:
தமிழகத்தில் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி ஆய்வகங்களில் கணினி பயிற்றுனர் என்ற பெயரில் டேட்டா என்டரி ஆப்பரேட்டர் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.
பி.எட்., கணினி அறிவியல் படித்த பெரும்பாலான ஆசிரியர்கள் பணி வாய்ப்பின்றி உள்ளனர். அவர்களுக்கு இப்பள்ளி ஆய்வகங்களில் நிரந்தரப் பணியிடம் ஏற்படுத்தி பணிபுரியும் வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநிலம் முழுதும் பி.எட்., கணினி அறிவியல் படித்து 60 ஆயிரம் பேர் வரை பணிக்காக காத்திருக்கின்றனர். கணினி அறிவியல் பாடம் அரசு பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை இல்லாததால் ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வுக்கூட கிடையாது.
மேலும் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வுக்கும் புறக்கணிக்கப்படுகின்றனர். மேல்நிலைக் கல்வியில் மட்டுமே கணினி அறிவியல் விருப்பப்பாடமாக உள்ளது. அதற்கு மட்டும் கணினி ஆசிரியர்கள் உள்ளனர்.
ஒவ்வொரு கணினி ஆய்வகத்திலும் கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். முந்தைய தி.மு.க., அரசு அவுட்சோர்ஸ் மூலம் 8209 பணியிடங்களை நிரப்பியதில் பி.எட்., கணினி அறிவியல் படித்தவர்கள் மிக குறைந்த அளவிலே நியமிக்கப்பட்டனர்.
இது குறித்து விருதுநகரில் தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலப்பொதுச் செயலாளர் குமரேசன் கூறியதாவது:
தமிழக நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகங்களில் கணினி அறிவியல் பாடத்தை ஏற்படுத்தி பி.எட்., கணினி அறிவியல் பயின்றோரை ஆய்வக கணினி ஆசிரியர்களாக நிரந்தரப் பணியில் நியமித்தால் வேலைவாய்ப்பற்ற பலர் வாழ்வாதாரம் மேம்படும். அரசு பள்ளிகளிலும் கணினி பயன்பாடு உயரும் என்றார்.
