உதவித்தொகை வழங்குவதாக போலி அழைப்பு; எச்சரிக்கையாக இருக்க அறிவுரை
உதவித்தொகை வழங்குவதாக போலி அழைப்பு; எச்சரிக்கையாக இருக்க அறிவுரை
UPDATED : பிப் 12, 2025 12:00 AM
ADDED : பிப் 12, 2025 11:11 AM
உடுமலை:
கல்வி உதவித்தொகை வழங்கப்படுவதாக கூறி போலி அழைப்புகள் வருகின்றன. இதை பெற்றோர் நம்ப வேண்டாம் என்று முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார் கூறினார்.
மத்திய, மாநில அரசுகள் வாயிலாக, பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, பல்வேறு திட்டங்களின் கீழ், கல்வி உதவித்தொகை தகுதிக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
இந்த தொகை தங்களுக்கு வந்துள்ளது, உங்கள் மகன் / மகளது பெயர், முகவரி விபரங்களை தாருங்கள்' என போலி அழைப்புகள் பெற்றோருக்கு சமீபகாலமாக வருகிறது. பெற்றோர், இவற்றை நம்பி, உங்களது சுய விபரங்களை பகிர வேண்டாம்.
வங்கிக்கணக்கு விபரத்தை அறிமுக மில்லாதவர்களுக்கு தெரிவிக்கக்கூடாது. இது தொடர்பாக, பள்ளித்தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோருக்கு அறிவுரைகளை வழங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி உதவித்தொகை தொடர்பாக, எந்த அதிகாரிகளும் மாணவர், பெற்றோரின் மொபைல் போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு வங்கி சார்ந்த, ஓ.டி.பி., உட்பட விபரங்களை கேட்க மாட்டார்கள்.
தேவையிருப்பின், நேரடியாக பள்ளிக்கு அழைத்து தான் சுய விபரங்களை பெறுவர். மோசடி, போலி அழைப்புகள் குறித்து பெற்றோர் மிக கவனமுடன் இருக்க வேண்டும். சந்தேகங்கள் இருந்தால் தலைமை ஆசிரியரிடம் கேட்டு விட்டு பின் பதில் அளிக்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.