சென்டாக் கலந்தாய்வுக்கு போலி ஆவணம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சென்டாக் கலந்தாய்வுக்கு போலி ஆவணம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
UPDATED : ஆக 09, 2025 12:00 AM
ADDED : ஆக 09, 2025 08:43 AM

புதுச்சேரி:
புதுச்சேரியில் சென்டாக் கலந்தாய்வுக்கு போலி ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்த 14 மாணவர்கள் மீது சுகதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் பாலா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்கள் சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அரசு ஒதுக்கீட்டிற்கு 1,657 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
தற்போது திருத்தப்பட்ட தரவரிசை பட்டியலில் 1,576 பேர் உள்ளனர். அவர்களின் சான்றிதழ்ளை ஆய்வு செய்த போது, தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 14 மாணவர்கள் போலி ஆவணங்கள் மூலம் இரட்டை குடியுரிமை பெற்று சென்டாக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளது தெரியவந்தது.
அகில இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவின்படி, ஜிப்மர் மாணவர் சேர்க்கைக்கான முதல் பட்டியல் இன்று 9ம் தேதி வெளியிடப்படுகிறது. இதில், புதுச்சேரி மாணவர்களுக்கு 64 இடங்கள் உள்ளது. இந்த பட்டியலில் வெளி மாநில மாணவர்கள் யாராவது உள்ளனரா என கண்டறிந்து சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போலி ஆவணங்கள் மூலம் புதுச்சேரி ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்து சென்டாக் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்கள் மீது சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை தகுதி நீக்கம் செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.