UPDATED : பிப் 21, 2026 03:17 PM
ADDED : பிப் 21, 2026 03:19 PM

சென்னை:
'பெங்களூரு உலகளாவிய மனித அமைதி பல்கலையில் பெறும் பட்டங்கள், உயர்கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புக்கு செல்லாது' என, யு.ஜி.சி., எச்சரித்துள்ளது.
பல்கலை மானியக்குழு எனும் யு.ஜி.சி., செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி வெளியிட்ட அறிவிப்பு:
கர்நாடக மாநிலம், பெங்களூரு ராஜாஜி நகரில், உலகளாவிய மனித அமைதி பல்கலை என்ற பெயரில், கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம், யு.ஜி.சி.,யின் விதிகளை மீறி, பட்டங்களை வழங்கி வருகிறது. இப்பல்கலை, யு.ஜி.சி.,யின் போலி பல்கலை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நிறுவனம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் எனும், ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் வேறு எந்த நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இந்த நிறுவனம் பட்டம், டிப்ளமா வழங்க அதிகாரம் இல்லை.
அங்கு வழங்கப்படும் பட்டம், உயர்கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புக்கு செல்லுபடியாகாது. எனவே, மாணவர்கள் அந்த பல்கலையில் சேர வேண்டாம்.
இது போன்ற, தன்னிச்சையான நிறுவனங்களில் சேருவது, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

