விரைவாக பணம் செலுத்தும் வசதி; இந்தியாவின் யு.பி.ஐ., உலக அளவில் முதலிடம்
விரைவாக பணம் செலுத்தும் வசதி; இந்தியாவின் யு.பி.ஐ., உலக அளவில் முதலிடம்
UPDATED : ஜூலை 21, 2025 12:00 AM
ADDED : ஜூலை 21, 2025 09:01 PM
புதுடில்லி: 
விரைவாக பணம் செலுத்துவதில் உலக அளவில் இந்தியாவின் யு.பி.ஐ., முதலிடம் வகிப்பதாக ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.
யுனிபைட் பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் எனப்படும் யு.பி.ஐ., இந்தியாவில் வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடி பணப் பரிமாற்றங்களை செய்ய உதவும் ஒரு அமைப்பாக உள்ளது. இதன்படி, ஒரு மொபைல் செயலி மூலம் பல வங்கிக் கணக்குகளை இணைத்து, பணம் செலுத்துவதற்கும் பெறுவதற்கும் ஒரு எளிய வழியை வழங்குகிறது. யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் பாதுகாப்பானவையாகவும் உள்ளன.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (என்.பி.சி.ஐ.,) 2016ல் தொடங்கப்பட்ட யு.பி.ஐ., வசதி, பயனர்கள் பல வங்கிக் கணக்குகளை ஒரே செயலியுடன் இணைத்து உடனடியாக பணத்தை மாற்ற அனுமதிக்கிறது. இது, 24 மணி நேரமும் அணுகக்கூடிய தன்மையில் உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் கூறியிருப்பதாவது:
உடனடி பணப்பரிமாற்றங்களை செய்து வரும் யு.பி.ஐ., தற்போது உலகளவில் 50 சதவீத பரிவர்த்தனைகளை கொண்டுள்ளது. ஏனென்றால் இதன் வேகம் மற்றும் எளிமைக்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.
இதன் மூலம் மாதம் தோறும் 1,800 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை கையாள முடிகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.24.03 லட்சம் கோடி மதிப்புள்ள பரிவர்த்தனை செயல்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது பரிவர்த்தனை அளவு 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

