யு.பி.எஸ்.சி., தேர்வில் சாதித்தவர்களுக்கு சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் பாராட்டு விழா
யு.பி.எஸ்.சி., தேர்வில் சாதித்தவர்களுக்கு சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் பாராட்டு விழா
UPDATED : மார் 17, 2026 07:16 AM
ADDED : மார் 17, 2026 07:16 AM

சென்னை:
யு.பி.எஸ்.சி., நடத்திய குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றி பெற்று, நாட்டுக்கே பெருமை சேர்த்த தமிழக மாணவர்களைக் கௌரவிக்கும் விதமாக, சென்னையில் உள்ள சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அந்த அகாடமியில் பயின்று அகில இந்திய அளவில் வெற்றி பெற்றுள்ள 39 சாதனையாளர்களுக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பேசிய முன்னாள் தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தர், நிர்வாகம் என்பது தான் மிகப்பெரிய சவாலான பணி என்றும், அந்தப் பணி இப்போது மாணவர்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார். மாணவர்கள் எப்போதும் தொடர்ந்து எதையாவது கற்க வேண்டும் என்ற ஆவலோடு இருக்க வேண்டும் என்றும், குறிப்பாகத் தமிழ்நாட்டு மாணவர்கள் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக ஏழை மக்களுக்கு உதவும் வகையில் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஐ.ஏ.எஸ்., தமிழக மாணவர்களின் திறமையை வெகுவாகப் பாராட்டினார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டு மாணவர்கள் தான் யு.பி.எஸ்.சி., தேர்வில் அறிவாளிகளாக இருக்கிறார்கள் என்பதை மற்ற மாநில மாணவர்களே ஒத்துக் கொள்கிறார்கள் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். அவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதோடு மட்டுமல்லாமல், பயிற்சிக்குச் செல்லும் போதும் மிகச்சிறந்த படிப்பாளிகளாக இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாணவர்களின் கனவு எப்போதும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், வறுமை, தடைகள், ஏளனப் பேச்சுக்கள் மற்றும் தோல்விகள் ஆகிய எல்லாவற்றையும் தாண்டி வர வேண்டும் என்பதை மட்டும் மனதில் நிறுத்திக் கொள்ளுமாறு கூறினார். இவற்றைத் தாண்டித் தான் எத்தனையோ பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம் கைவசமாகும் என்றும், “சிறகை விரியுங்கள், வானமே எல்லை” என்றும் மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
மேலும், இந்த விழாவில் உத்தரகாண்ட் மாநில முன்னாள் தலைமை நீதிபதி குகநாதன் நரேந்தர், தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரி ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஐ.ஏ.எஸ்., மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிர்வாக இயக்குனர் வைஷ்ணவி ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை வழங்கினர்.

