UPDATED : மார் 12, 2025 12:00 AM
ADDED : மார் 12, 2025 09:22 AM
கலபுரகி:
சப்பாத்தியை கையில் செய்ய வேண்டுமா, இயந்திரத்தில் செய்ய வேண்டுமா என்பது தொடர்பாக, கர்நாடகாவில் பல்கலை மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம், கலபுரகியில் மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு வடமாநில மாணவர்களும் படிக்கின்றனர். இவர்கள் விடுதியில் தங்கி உள்ளனர்.
சமீபத்தில் இங்கு இரவு உணவாக, விடுதியில் சப்பாத்தி தயாரிக்கப்பட்டது. அப்போது வடமாநில மாணவர்கள் சிலர், கையால் சப்பாத்தி தயாரித்தால் நன்றாக இருக்காது. இயந்திரத்தில் தயாரிக்க வேண்டும் என்று கூறினர். இதற்கு தென்மாநில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கையால்தான் தயாரிக்க வேண்டும் என, அவர்கள் கூறினர். மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது. தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார், மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, போலீசார் தடியடி நடத்தினர்.
இந்த மோதலில் எட்டு மாணவர்கள் காயம் அடைந்தனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.