தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/322 மாணவர் விடுதிகளில் உணவுக்கு தட்டுப்பாடு

322 மாணவர் விடுதிகளில் உணவுக்கு தட்டுப்பாடு

322 மாணவர் விடுதிகளில் உணவுக்கு தட்டுப்பாடு


UPDATED : ஜூன் 10, 2025 12:00 AM

ADDED : ஜூன் 10, 2025 01:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 10, 2025 12:00 AM ADDED : ஜூன் 10, 2025 01:20 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
ஆதிதிராவிடர் நல விடுதிகளில், மாணவர்கள் வருகையை உறுதிப்படுத்த, பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தும் பணி இரண்டு ஆண்டுகளாகியும் முடிக்கப்படாததால், 322 மாணவர் விடுதிகளில் உணவு மற்றும் பிற வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

தமிழகம் முழுதும் 1,331 ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் காப்பாளர்கள், அதிக மாணவர்கள் இருப்பதாக கூறி நிதி பெறுவதாக புகார் எழுந்தது.

வசதிகள் இல்லை

இதைத் தடுக்கவும், மாணவர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்தவும், 2023 - 24ம் கல்வியாண்டில், 1,275 விடுதிகளில் பயோமெட்ரிக் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி துவக்கப்பட்டது. அதற்காக, 27.15 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகளாகியும், 75 சதவீதம் அதாவது 953 விடுதிகளில் மட்டுமே பயோமெட்ரிக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் பொருத்தப்படாத விடுதிகளில், மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டங்கள் முழுமையாக வழங்கப்படுவதில்லை.

அத்துடன் அங்குள்ள மாணவர்கள் உணவு தட்டுப்பாடு உட்பட, பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

இதுகுறித்து, கடலுார், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த, விடுதி மாணவர்கள் சிலர் கூறியதாவது:


ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதிகளில், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அங்கு தங்க பலர் விரும்புவதில்லை.

இந்நிலையில், பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படாததை காரணம் காட்டி, விடுதிகளுக்கு வழங்க வேண்டிய உணவு பொருட்களுக்கான நிதி, வரவேற்பு பெட்டகம், பராமரிப்பு கிட், முடி திருத்தும் கூலி போன்றவற்றை அரசு தாமதமாக வழங்குகிறது.

இதனால், பல விடுதிகளில் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போதிய பொருட்கள் இல்லாததால், அரசு அறிவித்த 'மெனு'வின் படி, பல விடுதிகளில் உணவு சமைக்கப்படுவது இல்லை.

வரவேற்பு கிட்


கடந்த ஆண்டு விடுதிகளில் சேர்ந்த பலருக்கு, படுக்கை விரிப்பு, தலையணை உள்ளிட்டவை அடங்கிய, வரவேற்பு கிட் வழங்கப்படவில்லை. தற்போது விடுதிகளில், புதிய மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. எனவே, அரசு கடந்த ஆண்டை போல தாமதப்படுத்தாமல், நலத்திட்டங்களை விரைவாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், 75 சதவீத விடுதிகளில் பயோமெட்ரிக் பொருத்தப்பட்டுஉள்ளது.

இணைய வசதி இல்லாத தொலைதுார கிராமப் பகுதிகளில் மட்டும், பயோமெட்ரிக் பொருத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us