UPDATED : மார் 07, 2026 11:32 AM
ADDED : மார் 07, 2026 11:34 AM

கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் வறட்சி நிலவுவதால், வனத்தீ ஏற்படாமல் பாதுகாப்பு குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி சூழ்ந்து கிடக்கிறது. தற்போது, கடுமையான வெயில் காரணமாக வறட்சி நிலவுகிறது. இதனால், இலை கொடி சருகுகள் காய்ந்து காணப்படுவதால், எளிதில் வனத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது.
வனம் மற்றும் வனம் சார்ந்த உயிரினங்கள் பாதுகாப்பு கருதி, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மசினகுடி அருகே உள்ள வாழை தோட்டம் ஜி.ஆர்.ஜி., பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் குமரன் வரவேற்று பேசுகையில், “வனங்களில் தாவரங்கள், வனவிலங்குகள், பல்லுயிர் தன்மை கொண்ட உயிரினங்கள் நீடித்த நிலையான பாதுகாப்பு அவசியம். வனம் மற்றும் வன உயிரினங்கள் பாதுகாக்கப் பட்டால் மட்டுமே, நீர் ஆதாரம் பெருகும்,” என்றார்.
தலைமை ஆசிரியர் நந்தினி பேசுகையில், “வனங்களில் சிறு பூச்சி இனங்கள் முதல், யானைகள் வரை சூழல் பாதுகாப்பிற்கு அவசியமாக உள்ளன. இதனால், வன வளம் பாதுகாக்கப்பட வேண்டும். குறிப்பாக வறட்சி நாட்களில் வனத்தீ ஏற்படாமல் தவிர்க்கப்பட வேண்டும்,” என்றார்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்தில், மசினகுடி, கூடலுார், குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தற்போது வறட்சியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எதிர்வரும் நாட்களில் அதன் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. புற்கள் மற்றும் புதர் செடிகள் காய்ந்து வருகின்றன. மக்களின் கவன குறைவு காரணமாக, வனங்களில் தீ பரவுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்கள், வனத்தீ ஏற்படாமல் இருக்க, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தோட்டங்களில் குப்பைகளை எரிப்பது, கோவில் திருவிழாக்களை பாதுகாப்புடன் கொண்டாடுவது, புகைப்பிடித்து வீசி எரிவது, வேண்டும் என்றே வனத்தில் தீ பற்ற வைப்பதை தவிர்த்து வனத்தை பாதுகாக்க வேண்டும். நாட்டில், 99 சதவீதம் மனித செயல்களால் வனத்தீ ஏற்படுகிறது.
பறவைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதாலும், ஊர்வனத்திற்கு உகந்த காலம் என்பதாலும், பள்ளி மாணவர்கள் வனத்துறைக்கு துாதுவர்களாக செயல்பட்டு, வனங்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் வித்யா, மெட்டில்டா ஆகியோர் செய்திருந்தனர்.

