வனத்துறையின் வேழம் இயலியல் பூங்கா உருவாகிறது! யானைகளை ஆழமாக அறிய அரிய வாய்ப்பு
வனத்துறையின் வேழம் இயலியல் பூங்கா உருவாகிறது! யானைகளை ஆழமாக அறிய அரிய வாய்ப்பு
UPDATED : ஜன 12, 2026 12:50 PM
ADDED : ஜன 12, 2026 12:50 PM

மேட்டுப்பாளையம்: யானைகளை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில், வேழம் இயலியல் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்கா விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக, வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் வனத்துறை மர கிடங்கு உள்ளது. இந்த வளாகத்தில், வேழம் இயலியல் பூங்கா அமைக்கும் பணி 2020 - 2021ம் ஆண்டு துவங்கப்பட்டது.
பாதி பணிகளுக்கும் மேல் நிறைவடைந்த நிலையில், பூங்கா பணிகள் நிதி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டன. மீண்டும் கடந்த ஆண்டு ரூ.14 லட்சம் தமிழக அரசு நிதி ஒதுக்கியதை அடுத்து, மேட்டுப்பாளையம் வனத்துறை நிர்வாகம் சார்பில், பணிகள் மீண்டும் முழு வீச்சில் நடக்கின்றன.
மேட்டுப்பாளையம் வனச்சரகர் சசிக்குமார் கூறுகையில், உலகில் உள்ள பல்வேறு இன யானைகளின் சுவரோவியங்கள் பூங்காவில் வரையப்பட்டுள்ளன. அவற்றின் பெயர்கள், அந்த இனங்களின் வாழ்விடம், வாழ்ந்த காலம் உள்ளிட்ட விவரங்கள் முழுமையாக தொகுக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்படும்.
பண்டையக் காலத்தில் யானைகள் எதற்கெல்லாம், பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து, ஓவியங்கள் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யானைகளைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக, விழிப்புணர்வு மையம் மற்றும் திறந்தவெளி விளக்கப் பூங்கா, மையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது. பூங்கா விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளது, என்றார்.

