UPDATED : அக் 15, 2025 06:13 PM
ADDED : அக் 15, 2025 06:15 PM
புதுடில்லி:
டில்லியில், மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னாவை நேற்று சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு குடிமக்களுக்கு இலவச 'இ - விசா' வழங்கப்படும் என அறிவித்தார்.
கிழக்காசிய நாடான மங்கோலிய அதிபர் குரேல்சுக் உக்னா, நான்கு நாட்கள் அரசுமுறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ளார். டில்லியில், பிரதமர் மோடியை அவர் நேற்று சந்தித்து பேசினார். அப்போது, ராணுவம், எரிசக்தி, கல்வி, சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இதன்பின், செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது:
மங்கோலிய குடிமக்கள் இந்தியா வருவதற்கு, இலவச இ - விசா வழங்கப்படும். இந்தியா - மங்கோலியா இடையேயான உறவு வெறும் துாதரக உறவு மட்டுமல்ல, ஆன்மிக உறவும் கூட. பல நுாற்றாண்டுகளாக இரு நாடுகளும் புத்த மதத்தின் கொள்கைகளால் பிணைக்கப்பட்டுள்ளன. அதனால் தான் நாங்கள், 'ஆன்மிக சகோதரர்கள்' என, அழைக்கப்படுகிறோம்.
மங்கோலியாவின் வளர்ச்சியில் இந்தியா ஒரு உறுதியான மற்றும் நம்பகமான நட்பு நாடு. இந்தியாவின் 15,000 கோடி ரூபாய் கடனுதவி திட்டத்தின் கீழ், மங்கோலியாவில் கட்டப்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டம், அந்நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு புதிய வலிமையை கொடுக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.