டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
UPDATED : ஆக 19, 2026 06:10 PM
ADDED : ஆக 19, 2026 06:13 PM
கள்ளக்குறிச்சி:
குரூப் - 2, குரூப் - 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்கப்பட உள்ளது.
கலெக்டர் பத்மஜா செய்திக்குறிப்பு:
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் மத்திய, மாநில அரசு சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இப்பயிற்சி வகுப்பில் பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்ற பலர் பல்வேறு துறைகளில் பணிபுரிகின்றனர். நடப்பாண்டில் குரூப் - 2 மற்றும் குரூப் - 2ஏ தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
அதன்படி, 821 காலிப்பணியிடங்களுக்கு, வரும் நவம்பர் 1ம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் www.tnpscexams.in என்ற இணையதளம் மூலம் வரும் செப்டம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 22ம் தேதி சனிக்கிழமை காலை 10:00 மணியளவில், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் துவங்குகிறது.
தொடர்ந்து, வாரம் தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது தொடர்பான கூடுதல் விபரங்களை 04151 -295422, 245246 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
